மூத்த காவல்துறை அதிகாரி அமீத் வர்மா திடீர் மரணம்
சென்னை : மூத்த காவல்துறை அதிகாரியும், கூடுதல் டிஜிபியுமான அமீத் வர்மா சென்னையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.
வர்மாவுக்கு வயது 55. போலீஸ் அகாடமியின் கூடுதல் டிஜிபியாகஇருந்து வந்தார். அவருக்கு உடல் நலம் பாதித்ததால், மே மாதம் 30ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மரணமடைந்து விட்டார்.
இதையடுத்து அவரது உடல் ஐஜி குடியிருப்புக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
இன்று அமீத் வர்மாவின் உடல் சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
அமீத் வர்மா உ.பி. மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர். 1978ம் ஆண்டு தமிழக பிரிவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார். இந்தி தவிர ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்றவர்.
1980-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கூடுதல் போலீஸ் எஸ்.பியாக முதன் முதலில் பதவி வகித்தார்.
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் எஸ்.பியாக இருந்துள்ளார். 1994ம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார். ஆயுதப்படை, ரயில்வே ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். சென்னை போலீஸ் இணை கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
1999-ம் ஆண்டு ஐ.ஜி.யானார். 2005-ம் ஆண்டு கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.












Click it and Unblock the Notifications