பேசும்போதும், எழுதும்போதும் தமிழிலேயே செய்யுங்கள்-ப.சிதம்பரம் கோரிக்கை
கோவை: பேசும்போதும் தமிழில் பேசுங்கள், எழுதும்போதும் தமிழிலேயே எழுதுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.
இன்று மாலை நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவுக்கு முன்னிலை வகித்து ப.சிதம்பரம் பேசியதாவது...
வட்டார வழக்கு என்பது எல்லா நடுகளிலும் இருக்கிறது. அதில் பல நல்ல சொற்கள் உள்ளன. ஆனால் வட்டார வழக்கு என்கிற பெயரில் இல்லாத சொற்களையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தினால், அது மொழியை சிதைத்து விடும்.
ஒரு மொழியை சிதைக்கக்கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்று வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வழக்கு மொழி இழுக்கு மொழியாகிவிடுமோ என்கிற கவலை இருக்கிறது.
குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தமிழிலேயே அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
பேசும் போதும், எழுதும்போதும் சுடுசொற்கள், வன்சொற்கள் பயன்படுத்தாமல் இன்சொற்கள் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒருவர் பேசினார், கவிப்பேரரசு போன்ற ஒருவர் பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கிறோம் அல்லவா, அதுதான் இனிய தமிழ். அப்படிப் பேசி எழுதப் பழக வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.