ஜெ. முதல்வராக பாடுபடுவோம்: வன்னியர் கூட்டமைப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை முதல்வராக்க வன்னியர்கள் அனைவரும் பாடுபடுவோம் என்று சி.என்.ராமமூர்த்தி தலைமையில் இயங்கும் வன்னியர் கூட்டமைப்பு கூறியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் ராமமூர்த்தி கூறியதாவது:
சென்னையில் நடந்த வன்னியர்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதில், வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்வுக்கு திமுக ஆதரவளித்துள்ளது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா வெளிப்படையாக கூறியுள்ளார். இதன் மூலம் திமுகவின் இரட்டை வேடம் மக்களுக்கு படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சனைகளுக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தினசரி போராட்டங்கள் நடத்தி வருகிறார். இனி வன்னியர் கூட்டமைப்பினரும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்வர்.
வன்னியர் நலனை பற்றி கண்டுகொள்ளாமல், பதவிக்காக மட்டுமே கட்சி நடத்தும் பாமக நிறுவனர் ராமதாசையும், அவரது மகன் அன்புமணியையும் இனி வன்னிய சமுதாயத்தினர் நம்பமாட்டார்கள்.
வன்னியர் சமுதாயத்தின் கோரிக்கைகள் குறித்து, நேரில் பேசுவதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி எங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. நாங்கள் அனுமதி கேட்டவுடனே ஜெயலலிதா சந்திக்க அனுமதி கொடுத்தார்.
தான் ஆட்சிக்கு வந்ததும், எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே, ஜெயலலிதாவை முதல்வராக்க வன்னியர்கள் அனைவரும் பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications