உலக கோப்பை கால்பந்து: ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் தோற்றது போல திமுகவும் தோற்கும்-வைகோ
திருச்செங்கோட்டில் நடந்த அகில இந்திய கபடி போட்டி பரிசளிப்பு விழாவில் வைகோ கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில்,
உலக கோப்பை கால்பந்து போட்டியில் கடந்த காலங்களில் வெற்றி வாகை சூடிய ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் அணிகள் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளன. இதே நிலை தான் தமிழக அரசியலிலும் நடக்கும்.
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் தமிழக முதல்வரை விமர்சித்த பழ. கருப்பையா வீட்டில் தாக்குதல் நடந்துள்ளது.
ரூ.1 லட்சம் கோடி ஊழலில் சிக்கியுள்ள மத்திய மந்திரி ராசாவை சென்னை விமான நிலையத்தில் கேள்வி கேட்க வந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு வந்த பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளுக்கு தமிழகத்தில் அனுமதி இல்லை.
ஆனால் கொலை குற்றம் சுமத்தப்பட்ட டக்ளஸ் தேவானந்தம் இங்கு வந்து பிரதமருடன் கை குலுக்குகிறார். ஈழத் தமிழர்களை கொன்று குவித்த சிங்கள அரசின் ரத்த சுவடு கூட காயவில்லை. ஆனால் இந்தியா வந்த ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் தமிழ் மன்னர்களுக்கு பயப்படாமல் அறிவுரை வழங்கியவர்கள் தமிழ்ப் புலவர்கள். ஆனால் இன்று செம்மொழி மாநாடு என்ற பெயரில் முழுக்க முழுக்க முதல்வரை பாராட்டி பேசுகிறார்கள் என்றார் வைகோ.