கல்வி கடன் வழங்க தயங்கும் வங்கிகள்: நெல்லை எம்பி புகார்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள வங்கிகள் கல்வி கடன் வழங்குவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருவதாக நெல்லை எம்பி ராமசுப்பு புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அவர் அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
நெல்லை மாவட்டத்தில் உள்ள பல வங்கிகள் கல்வி கடன் வழங்குவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. மேலும் வங்கி கடன் பெற்று முதலாம் ஆண்டு உயர்கல்வி படிக்கும் மாணவர்களிடம் அந்த ஆண்டு நிறைவில் வட்டியை செலுத்த சொல்வதுடன், செலுத்தாதவர்களுக்கு அதையே காரணம் காட்டி அடுத்த கல்வி ஆண்டிற்கான கடன் வழங்காமல் இழுத்தடித்து வரும் அவல நிலையும் உள்ளது.
பொதுவாக தினக்கூலி மற்றும் விவசாயிகளாக உள்ள பெற்றோரிடம் வட்டி விஷயத்தில் கண்டிப்பு காட்டாமல் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்கள் பணியில் சேர்ந்தபிறகு வட்டி மற்றும் அசல் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் கடன் தொகை வசூலிப்பது எளிதாகும். மேலும் அனைத்து வங்கிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்குவதற்கு என தனி அலுவலர்கள் நியமித்து சிறப்பு பிரிவு செயல்படுத்த வேண்டும் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.