மனைவியை கொன்ற ஆஸ்திரேலியா வாழ் இந்தியருக்கு 17 ஆண்டுகள் சிறை
மெல்போர்ன்: மனைவியைக் கொலை செய்த இந்தியருக்கு 17 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கோர்ட்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர் சுக்மந்தர் சிங்குக்கும் அவரது மனைவி மகிந்தர் கவுருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் சண்டை போடாத நாளே இல்லை.
குடிப்பழக்கம் உள்ள சுக்மந்தர் சிங் தினமும் குடி போதையில் மனைவியை அடிப்பது வழக்கமாகி விட்டது. இந்த கொடுமையை சகிக்க முடியாத மூத்த மகள் சரப்ஜித் கவுர் (21) ஆஸ்திரேலியாவுக்கு படிக்க சென்றுவிட்டார்.
தன் தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற அவரை கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு வரவழைத்தார். இதையடுத்து, தன்னையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துக் கொள்ளும்படி சுக்மந்தர் சிங் மகளை தொல்லை செய்ய ஆரம்பித்தார். இதையடுத்து தந்தையிடம் சில உறுதிமொழிகளைப் பெற்றுக்கொண்டு சரப்ஜித் கவுர் அவரையும் அழைத்துக் கொண்டார்.
ஆஸ்திரேலியா சென்ற பிறகு சிறிது காலம் ஒழுங்காக இருந்த அவர், பின்னர் பழையபடி மாறிவிட்டார். தினமும் குடிப்பதோடு மட்டுமல்லாமல் போதைப் பொருட்களும் எடுத்துக்கொண்டு மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ம் தேதி மனைவியை மரக்கட்டையால் அடித்துள்ளார் சுக்மந்தர் சிங். இதில் மகிந்தர் கவுர் பலியானார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுக்மந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.