'மிஸ் யூஸ்': விமானப் படைக்கு ரூ. 54 லட்சம் தர வேண்டிய கெளடா!
டெல்லி: தேவ கெளடா பிரதமராக இருந்தபோது இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை தனது சொந்தப் பணிகளுக்காக பலமுறை பயன்படுத்திய வகையி்ல் ரூ. 54.61 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாம்.
குருட்டு அதிர்ஷ்டத்தால் நாட்டின் பிரதரமானவர் தேவ கெளடா. குறைந்த காலமே அந்தப் பதவியி்ல் இருந்த அவர் இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானங்களை அலுவல் சாராத பணிகளுக்காக பல முறை பயன்படுத்தினா.
இதற்காக அவர் ரூ.54.61 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று விமானப் படை பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அதை கெளடா கண்டுகொள்ளவில்லை.
பிரதமர் பதவியில் இருந்து இறங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், இந்தக் கட்டணத்தை கெளடா இதுவரை செலுத்தவில்லை என்பதால் அதை அவரிடமிருந்து வசூலிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளது இந்திய விமானப் படை.
அதே போல மறைந்த முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி.சுக்லா ஆகியோரும் இந்திய விமானப் படை விமானங்களை அலுவல் சாராத பணிகளுக்காக பலமுறை பயன்படுத்தியுள்ளனர்.
இதற்காக சந்திரசேகர் ரூ.5.91 கோடியும், சுக்லா ரூ.4.60 லட்சமும் விமானக் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
சந்திரசேகரிடமிருந்து விமானக் கட்டணத்தை வசூலிக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2001ல் விமானப் படை சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சந்திரசேகர் இறந்துவிட்டதால் 2008ம் ஆண்டில் வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
முன்னாள் பிரதமர்களில் விமானப் படை விமானங்கள் 'மி்ஸ் யூஸ்' செய்யாத இரு தலைவர்கள் வி.பி.சிங் மற்றும் ஐ.கே. குஜ்ரால் ஆகியோர் தான். தனிப்பட்ட காரணங்களுக்காக விமானத்தை பயன்படுத்தியதற்காக மிச்சம் வைக்காமல் பணத்தை செலுத்தியவர் வி.பி.சிங். குஜ்ரால் தனிப்பட்ட முறையில் விமானத்தை பயன்படுத்தியதில்லை.