தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை-மொய்லி
டெல்லியில் அமைச்சர் வீரப்ப மொய்லி எழுதிய Shree Ramayana mahanveshanam என்ற நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு வெளியீட்டு விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் மொய்லி பேசுகையில்,
பேரரசை ஆண்டிருந்தாலும் ராவணனால் தன்னை தானே ஆள முடியவில்லை. ஆனால் சிறிய பிரதேசத்தை கூட ஆளாத ராமன் தன்னை தானே ஆளும் திறன் பெற்றிருந்தான் என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்குமா என்று கேட்கப்பட்டது.
இதற்கு அவர், தமிழ் மொழி மட்டுமின்றி வேறு பல மாநில மொழிகளையும் உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நீதித்துறையுடன் ஆலோசனை நடத்திய பிறகே மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றார்.