கருணாநிதிக்கு கோவில் கட்டும் வேலூர் திமுக கவுன்சிலர்

முதல்வர் கருணாநிதி பெயரில் செம்மொழி விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவரது பெயரில் வீட்டு வசதித் திட்டம், உயிர் காப்பீட்டுத்திட்டம் ஆகியவை உள்ளன. முதல்வர் பெயரில் டிவி சானலும் கூட உள்ளது. இந்த நிலையில் முதல்வர் பெயரில் ஒரு கோவில் வரவுள்ளது வேலூரில்.
வேலூர் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கும் ஜி.ஆர்.கிருஷ்ணமூர்த்திதான் இந்தக் கோவிலை கட்ட முனைந்துள்ளார். முதல்வர் கருணாநிதியின் ஏழை மக்கள் நலத் திட்டங்களால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்தக் கோவிலுக்கு கலைஞர் திருக்கோவில் என அவர் பெயரிட்டுள்ளார். குடியாத்தம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சாமிரெட்டிப்பள்ளி கிராமத்தில் இந்தக் கோவில் வருகிறது.
ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக்கோவில் உருவாகிறது. கிரானைட்டால் ஆன முதல்வர் கருணாநிதியின் சிலை இங்கு வைக்கப்படுகிறது. வெளியில் உள்ள தூண்களில் மு.க.ஸ்லாடின், துரைமுருகன், மாவட்ட திமுக செயலாளர் ஆர்.காந்தியின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கிருஷ்ணூ்ர்த்தி கூறுகையில், முதல்வர் கருணாநிதி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் எனது கிராமத்தில் மட்டும் 13 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முதல்வரை தாங்கள் கடவுள் போல கருதுவதாக அவர்கள் கூறினர். இதையடுத்தே எனக்கு கோவில் கட்டும் ஐடியா வந்தது என்றார்.
3 மாதங்களுக்கு முன்பு கட்டுமானப் பணிகளை கிருஷ்ணமூர்த்தி தொடங்கினார். ரூ 2 லட்சம் செலவில் இக்கோவில் கட்டப்படுகிறதாம். இன்னும் 15 நாட்களில் பணிகள் முடிந்து விடும். பின்னர் அதைச் சுற்றி பூங்கா அமைக்கவும் கிருஷ்ணமூர்த்தி திட்டமிட்டுள்ளார்.
சரி இதை முதல்வர் அனுமதிப்பாரா என்று கேட்டபோது, இது எங்களது விருப்பும். அவரை நாங்கள் கடவுளாகத்தான் கருதுகிறோம் என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.












Click it and Unblock the Notifications