பாலியல் புகார்: கொடைக்கானல் பள்ளி தாளாளர் சரண்-முதல்வர் கைது
முன்னதாக அந்தப் பள்ளியின் முதல்வர் ஷீபாவை போலீஸார் கைது செய்தனர்.
பாலியல் புகாரில் சிக்கிய பிரைட் கடந்த 2 வாரமாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது நில மோசடி வழக்கும் பதிவாகியுள்ளது.
தலைமறைவாக இருந்து வந்த அவரைப் பிடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் வெளிநாட்டுக்கு ஓடி விடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
இந் நிலையில் பிரைட் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த கோர்ட், சம்பந்தப்பட்ட மாணவியுடன் தங்கியிருந்த 16 மாணவிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படையில், பிரைட்டுக்கு உதவியதாக நேற்று நள்ளிரவில் பள்ளி முதல்வர் ஷீபா பால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பிரைட்டுக்கும் போலீஸார் கடும் எச்சரிக்கை விடுத்தனர். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் சரணடைய வேண்டும். அவருக்கு யாரும் உதவக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரைட் இன்று ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.