தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் உயர வாய்ப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் மீண்டும் மாற்றியமைக்கப்படவுள்ளது.
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் தமிழக அரசு நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கல்வி கட்டணத்தை நிர்ணயித்தது.
அந்த குழு தமிழகமெங்கும் பள்ளிகளை ஆய்வு செய்து ஆய்வின் அடிப்படையில் குறிப்பிட்ட கல்வி கட்டண விகிதத்தை நிர்ணயம் செய்தது. இதற்கு பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
ஆனால், இந்த புதிய கட்டணத்தை ஏற்க தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தயாராக இல்லை. இவ்வளவு குறைவாக கட்டணம் வசூலித்தால் பள்ளிகளை திறம்பட நடத்த இயலாது என்று வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
இதையடுத்து கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோவிந்தராஜன் குழுவிடம் தனியார் பள்ளிகள் மனு கொடுத்தன.
இந் நிலையி்ல் நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்து வருகிறது. அதனால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணம் மாறலாம் என்று தெரிகிறது.
மாற்றப்பட்ட புதிய கல்வி கட்டணம் இரு வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று நீதிபதி கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
இந்த புதிய கல்வி கட்டணத்தால் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் மேலும் உயரும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications