திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பெண் படுகொலை-நகைகள் கொள்ளை
திருவண்ணாமலை: புகழ் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை பவளக்குன்று ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் காந்திமதிநாதன், சுதந்திர போராட்ட தியாகி. அவரது மனைவி பட்டம்மாள் (70). இவர்களுக்கு குழந்தை இல்லை. காந்திமதிநாதன் இறந்து விட்டார். பட்டம்மாள் தனியாக வசித்து வந்தார்.
பட்டம்மாள் தினசரி அதிகாலை 5.30 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் செல்வார். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் பூ பறித்து அதை மாலையாக்கி சாமிக்கு சூட்டி விட்டு மீதப் பூவை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபடுவது வழக்கம். 9 மணியளவில் வீடு திரும்புவார். அதன் பின்னர் அவரது அண்ணன் மகள் அமராவதி அத்தைக்கு சாப்பாடு எடுத்து வந்து தருவார்.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணியளவில் கோவிலுக்குச் சென்றார் பட்டம்மாள். ஆனால் வீடு திரும்பவில்லை. 9 மணியளவில் வந்த அமராவதி அத்தையைக் காணாமல் கோவிலுக்கு வந்தார். அங்கு கோவில் முழுவதையும் சுற்றிப் பார்த்தும் காணாததால், நந்தவனத்திற்கு வந்து பார்ததுள்ளார். அப்போது அங்கு பட்டம்மாள் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அலறினார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடி விட்டது.
போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடந்த கொலையால் திருவண்ணாமலை முழுவதும் பரபரப்பாகி விட்டது. கலெக்டர் ராஜேந்திரன், வேலூர் டிஐஜி ஜெயராமன் உள்ளிட்டோரும் விரைந்து வந்தனர்.
பட்டம்மாள் அணி்ந்திருந்த 15 பவுன் நகைகளைக் காணவில்லை. எனவே நகைக்காக இந்தக் கொலை நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கொலை நடந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டு பரிகார பூஜை செய்யப்பட்டு பின்னர் வழக்கம்போல பூஜைகள் நடந்தன.












Click it and Unblock the Notifications