எதிர்க்கட்சிகளின் பந்த்-வணிகர் சங்கங்களின் பேரவை புறக்கணிப்பு
சென்னை: நாடு முழுவதும் ஜூலை5ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்தில் தாங்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தமி்ழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னை பெரம்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரவையின் தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார்.
அரசியல் பந்த்
பின்னர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 5-ந் தேதி எதிர்க்கட்சிகளால் அறிவிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் நியாயம் இருந்தாலும் அரசியலே மேலோங்கி இருக்கிறது என்று கருதுகிறோம். எனவே, இந்த போராட்டத்தில் வணிகர்கள் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கருணாநிதிக்குப் பாராட்டு
மேலும், அரசியல் கட்சிகள் நடத்தும் எந்த போராட்டத்திலும் பங்கேற்க மாட்டோம் என்பதை விரைவில் அறிவிப்போம். உலகமே வியக்கும் வண்ணம் உலகதமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்திய முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வணிகர்கள் சங்கம் பாராட்டுகிறது என்றார் வெள்ளையன்.
வணிகர் பேரவை உடைந்தது
இதற்கிடையே வெள்ளையன் தலைமையிலான வணிகர் பேரவையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அமைப்பின் நிர்வாகிகள் சிலர் தனியாக சில நாட்களுக்கு முன்பு கூட்டம் போட்டனர். அப்போது வெள்ளையன் தனித்து தன்னிச்சையாக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் தனியாக ஒரு நிர்வாகக் குழுவையும் அவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து வெள்ளையனும் தன் பங்குக்கு சில புதிய நிர்வாகிகளை நேற்று அறிவித்தார்.












Click it and Unblock the Notifications