மிடாஸ் மதுபான ஆலை குறித்து ஜெ. பேசத் தயாரா? கருணாநிதி கேள்வி
சென்னை : ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரிஸ் மதுபான ஆலை குறித்து ஜெயலலிதா பேசத் தயாரா. அதுதொடர்பான புகார்கள் குறித்து விளக்கம் அளிக்கத் தயாரா என்று முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோருக்கு சொந்தமாக மதுபான ஆலைகள் உள்ளது குறித்து அறிக்கையொன்றில் கூறியிருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாள் தவறினாலும் அறிக்கை விடத் தவறாத எதிர்க்கட்சி தலைவர் ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியே கட்சியை நடத்திவிடலாம் என்று திட்டமிட்டு செய்து கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய அறிக்கையில் துணை முதல்வர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோர் புதிய சாராய தொழிற்சாலைகளை மின்னல் வேகத்தில் எழுப்பியுள்ளதாகவும், இந்த நிறுவனங்களுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் ஆர்டர்கள் அதிக அளவில் வழங்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன என்று ஒரு அபாண்டமான குற்றச்சாட்டினைச் சொல்லியிருக்கிறார்.
"தான் திருடி பிறரை நம்பாள்'' என்பது பழமொழி. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பெயரில் புதிய சாராய தொழிற்சாலைகள் என்றால், அந்த தொழிற்சாலைகள் எங்கே இருக்கின்றன? அந்த தொழிற்சாலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் அதிக அளவில் ஆர்டர் வழங்கப்பட்டது என்றால் எவ்வளவு? இந்த விவரங்களையெல்லாம் ஜெயலலிதா சொல்லத் தயாரா? நாம் சிலவற்றைச் சொல்லவேண்டாமென்று நினைத்தாலும், ஜெயலலிதா தனது அறிக்கை வாயிலாகவே நம்மைச் சொல்லி ஞாபகப்படுத்த வைக்கிறார்.
"மிடாஸ்'' தொழிற்சாலை ஜெயலலிதா ஆட்சி காலத்திலே தொடங்கப்பட்டதே, அது யாருடைய தொழிற்சாலை? அது யாருக்கு சொந்தம் என்பது ஊருக்கே வெளிச்சமானது உண்டா? இல்லையா? அது ஜெயலலிதாவிற்கு வேண்டியவர்களுக்கு என்பது உலகம் அறிந்த உண்மை என்ற போதிலும் நான்காண்டு கால கழக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்கின் ஆர்டர்கள் குறைக்கப்பட்டதுண்டா? இல்லையே! அப்படிப்பட்ட "அல்பப்புத்தி'' இந்த அரசுக்கு கிடையாது.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் "மிடாஸ்'' தொழிற்சாலைக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது, அந்த தொழிற்சாலையை ஊக்குவிக்க அந்த ஆட்சியிலே என்னவெல்லாம் செய்யப்பட்டது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். தமிழ்நாட்டில் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகையறாக்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்திலும், தொடர்ந்து 1996 முதல் 2001 வரை இருந்த தி.மு.கழக ஆட்சி காலத்திலும் ஐந்துதான் இருந்தன. அவையாவன: 1. மோகன் புரூவரீஸ், 2. சிவா டிஸ்டிலரீஸ், 3. பாலாஜி டிஸ்டிலரீஸ், 4. எம்.பி. டிஸ்டிலரீஸ், 5. சாபிள் டிஸ்டிலரீஸ்.
இந்த ஐந்தைத் தவிர ஜெயலலிதாவின் கடந்த ஆட்சி காலத்தில் மேலும் ஒரு தொழிற்சாலை தொடங்கப்பட்டது. அதுதான் மிடாஸ் டிஸ்டிலரீஸ். தற்போது ஸ்டாலின் பெயரிலும், கனிமொழி பெயரிலும் புதிய சாராயத் தொழிற்சாலைகள் மின்னல் வேகத்தில் உருவாகி வருவதாக அறிக்கை விட்டுள்ள ஜெயலலிதா ஆட்சியிலே அனுமதி வழங்கப்பட்டதுதான் இந்த மிடாஸ் தொழிற்சாலை. இந்த மிடாஸ்' டிஸ்டிலரீஸ் எப்படி வந்தது என்பதைப் பற்றி விவரமாகக் கூறவேண்டும். நான் தமிழக முதல்வராக இருந்தபோது, மேலே கூறிய ஐந்து மதுபான ஆலை அதிபர்களும் தங்களுடைய ஆண்டு மதுபான உற்பத்தித் திறனை அதிகரித்துக்கொள்ள அனுமதி வேண்டுமென்று அனுமதி கோரிய போது, நான் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
அப்போது கோல்டன் டிஸ்டிலரீஸ் என்ற தனியார் நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் மதுபான தேவைகள் அதிகமாக இருப்பதால், ஏற்கனவே உள்ள மது பான ஆலைகளுக்கு உற்பத்தித் திறனை அதிகப்படுத்திக்கொடுப்பதற்கு பதிலாக தங்களுக்கு மதுபானம் தயாரிக்க தனியாக உரிமம் தரவேண்டுமென்று கோரி, தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. புதிதாக யாருக்கும் அனுமதி அளிப்பதில்லை என்பதால், அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. (அரசாணை எண்.55). உடனே அந்த தனியார் நிறுவனம் நீதிமன்றத்திற்கு சென்று அங்கே 30-3-2001 அன்று தங்களுக்கு சாதகமாக உத்தரவு பெற்றது; எனினும், தமிழக அரசின் சார்பில் வழங்க வேண்டிய சிறப்பு உரிமம் வழங்கப்படவில்லை. மாறாக நீதிமன்ற ஆணையை எதிர்த்து மேல் முறையீடும் செய்தது.
2001-ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பதவியேற்றவுடன், 1-2-2002 அன்று கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவில், தங்கள் கோரிக்கையை அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றும், நீதிமன்ற மேல் முறையீட்டைத் திரும்பப்பெற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டது. ஜெயலலிதா அரசு, அந்த மனுவை உடனடியாக பரிசீலித்து அதாவது ஐம்பது நாட்களுக்குள்ளாகவே அதாவது 21-3-2002 அன்றே அந்த நிறுவனம் மலிவு விலை மதுபானம் தயாரிப்பதற்கான ஆணையைப் பிறப்பித்தது. இன்னும் சொல்ல வேண்டுமேயானால் 21-3-2002 அன்று அரசாணை தயாரிக்கப்பட்டு, அந்த ஒரே நாளில் அந்த கோப்பு அனைத்து அதிகாரிகளாலும் பார்க்கப்பட்டு, கையெழுத்திடப்பட்டு, அதே நாளிலேயே ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியைப் பெற்றுக்கொண்ட கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம், அதற்கடுத்த மாதமே அதாவது 15-4-2002 அன்று மீண்டும் ஒரு மனுவினை அரசுக்கு தாக்கல் செய்தது. அந்த மனுவில் தங்களுக்கு மலிவு விலை மதுபானம் தயாரிக்கும் அனுமதி மட்டும் போதாது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அன்னிய நாட்டு மது வகையறாக்களைத் தயாரிக்கும் அனுமதி வேண்டு மென்று அரசைக் கேட்டுக்கொண்டார்கள். அந்த மனுவையும் ஜெயலலிதா அரசு பரிசீலித்து ஐம்பதே நாட்களில் அதாவது 30-5-2002-ல் அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவிட்டுள்ளது. (அரசாணை எண். 115)
30-5-2002-ல் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகு- பத்தே நாட்களில் மீண்டும் அந்த கோல்டன் டிஸ்டிலரீஸ் நிறுவனம் அரசுக்கு ஒரு கோரிக்கை மனுவினைத் தருகிறது. அந்த மனுவில் தங்கள் தொழிற்சாலையை திருப்போரூர் தாலுகாவில் உள்ள தையூர் கிராமத்திலிருந்து திருப்பெரும்புதூர் தாலுகாவில் உள்ள சிறுமாத்தூர் கிராமத்திற்கு மாற்றிட அனுமதிக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையும் ஒரே மாதத்தில் ஏற்று 10-7-2002 அன்று அந்த இடத்தை மாற்றிக்கொள்வதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. (அரசாணை எண்.131).
தொடர்ந்து அந்த நிறுவனம் 26-9-2002 அன்று அரசுக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் நிறுவனத்தின் பெயரை "மிடாஸ் கோல்டன் டிஸ்டிலரீஸ்'' என்று மாற்றிக்கொண்டதாகத் தெரிவித்து, அதையும் அரசு ஏற்றுக்கொண்டது. இந்த பெயர் மாற்றம் வெளியே வந்த பிறகு, அரசாங்கம் இவ்வளவு அவசர அவசரமாக அந்த நிறுவனத்திற்கு என்ன காரணத்தால் (?) இந்த அனுமதியை வழங்கியது என்ற விவரங்கள் எல்லாம் வெளிஉலகத்திற்கு தெரிந்தது.
மதுபானங்களைத் தயாரிக்கும் இந்த ஆறு தொழிற்சாலைகளும் ஒரு ஆண்டுக்கு எவ்வளவு சரக்குகளைத் தயாரிக்கலாம் என்பது அரசினால் நிர்ணயிக்கப்படும். மோகன் புரூவரீஸ்- 42 லட்சம் பெட்டிகள், சிவா டிஸ்டிலரீஸ்- 66 லட்சம் பெட்டிகள், பாலாஜி டிஸ்டிலரீஸ்- 57 லட்சம் பெட்டிகள், எம்.பி. டிஸ்டிலரீஸ்- 30 லட்சம் பெட்டிகள், சாபிள் டிஸ்டலரீஸ்- 30 லட்சம் பெட்டிகள். ஆனால் மிடாஸ் டிஸ்டிலரீஸ் ஆண்டு ஒன்றுக்கு எத்தனை லட்சம் பெட்டிகள் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். அதற்கென்று ஒரு குழு அமைத்து அவர்களின் பரிந்துரைகளைப் பெற்று எவ்வளவு பெட்டிகள் தயாரிக்கலாம் என்று நிர்ணயிக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி இருந்தவரை அந்த குழுவே நியமிக்கப்படவில்லை.
தி.மு.கழக அரசு இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் மூலப்பொருள் வழங்குவது பற்றி அரசு ஆணை பிறப்பிக்கும். ஓராண்டு தேவைக்கான மூலப்பொருள் அதாவது ஏப்ரல் மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை 12 மாதங்களுக்கான தேவையான மூலப்பொருள் பெற்றுக்கொள்ள அரசு ஒரே ஆணையில் அனுமதி வழங்கும். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் இதில் பெரிய மாற்றம் செய்யப்பட்டது. ஜெயலலிதா அரசு பொறுப்பேற்ற 2001-ம் ஆண்டு, 2001-2002-ம் ஆண்டுக்கு மட்டும் ஓராண்டிற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இவர்களுடைய "மிடாஸ்'' நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு, மூலப்பொருள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் ஆணை ஆண்டு ஒன்றுக்கு நான்கு தவணையாக மாற்றப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மூலப்பொருள் வாங்குவதற்கான அனுமதி அரசிடமிருந்து பெற வேண்டும் என்கிறபோது, அரசின் தயவு அவர்களுக்கு எப்போதும் தேவைப்படும். தங்களுக்கு அனுசரணையாக எந்தவொரு நிறுவனமும் இல்லாவிட்டால், உடனடியாக அந்த நிறுவனத்திற்கான மூலப்பொருள் அனுமதி வழங்குவதில் அரசு தயக்கம் காட்டும். எனவே இந்த தொழிற்சாலைகள் எல்லாம் அரசின் தயவை நாடியே இருந்து வர வேண்டிய நிலைமை உண்டாயிற்று. மேலும் அந்த நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய மூலப்பொருள் வழங்குவதில் தாமதம் செய்தால், "மிடாஸ்'' நிறுவனத்தின் உற்பத்தி பெருகிவிடும் என்பதற்காகவே இந்த தந்திரம் கையாளப்பட்டு அதில் பெரும் வெற்றியும் பெற்றார்கள்.
நான் மிடாஸ் நிறுவன ஊழல் பற்றி ஏற்கனவே அறிக்கை வெளியிட்டபோது அந்த நிறுவனத்தின் உற்பத்தி, விற்பனை எவ்வளவு என்பதை ஆண்டு வாரியாக வெளியிடத் தயாரா? என்று கேட்டிருந்தேன். ஆனால் அ.தி.மு.க. அரசு அந்த விவரத்தை வெளியிடவில்லை. எனவே அந்த விவரத்தையும் அப்போதே நானே வெளியிட்டேன். ஆனால் அப்போது ஆட்சியிலே இருந்தவர்கள் நான் கூறிய எந்த தகவலையும் மறுக்கவில்லை.
மிடாஸ் நிறுவனம் 2003-2004-ம் ஆண்டில் விற்பனை செய்த சரக்குகள் 7 லட்சத்து 48 ஆயிரத்து 638 பெட்டிகள்தான். அந்த ஆண்டு வரை மதுபான சில்லரை விற்பனை தனியாரால் ஏலம் எடுத்து நடத்தப்பட்டது. சில்லரை விற்பனையை நடத்திய தனியார்; மிடாஸ் நிறுவனம் தயாரித்த சரக்குகளை அதிகமாக வாங்கிட முன்வரவில்லை. எனவே ஜெயலலிதா அரசு, அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக சில்லரை விற்பனையை அரசே எடுத்துக்கொண்டு செய்யப்போவதாக அறிவித்து, அமலாக்கிய போதிலும், உண்மையான எண்ணம் மிடாஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளை கட்டாயமாக டாஸ்மாக் நிறுவனத்தின் வாயிலாக சில்லரைக் கடைகளுக்கு கொண்டு போய் விற்று, அதிக லாபம் பெற்றிட வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு அவர்கள் செய்ததின் விளைவாக 2003-2004-ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை 7 லட்சத்து 48 ஆயிரம் பெட்டிகள் என்பதற்கு மாறாக, 2004-2005-ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தின் தரம் குறைந்த சரக்கு, 28 லட்சத்து 50 ஆயிரத்து 95 பெட்டிகள் என்று பெருகியது. ஒரே ஆண்டில் நான்கு மடங்கு அதிகமாக விற்பனை ஆனதற்கு காரணமே, சில்லரை விற்பனையை அரசாங்கமே எடுத்து நடத்தியதால்தான்.!
2003-2004-ம் ஆண்டு மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை மொத்த விற்பனையில் 4.68 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 2004-2005-ம் ஆண்டு விற்பனை 14.79 சதவிகிதம் என்ற அளவிற்கு உயர்ந்தது. அடுத்து, 2005-2006ம் ஆண்டில் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை எவ்வளவு தெரியுமா? 2003-2004-ல் 7 லட்சத்து 48 ஆயிரம் பெட்டிகள் என்பதற்கு மாறாக 2005-2006-ல் 51 லட்சத்து 22 ஆயிரம் பெட்டிகள். அதாவது எட்டு மடங்கு விற்பனை இரண்டே ஆண்டுகளில் அதிக மாயிற்று என்றால் அதற்கு என்ன காரணம்? சதவிகித அடிப்படையிலே சொல்ல வேண்டுமென்றால், 2003-2004-ம் ஆண்டு மொத்த விற்பனையில் 4.68 சதவிகிதமாக இருந்தது, 2005-2006-ல் 22.49 சதவிகிதம் என்ற அளவிற்கு பெருகக்கூடிய நிலையில் ஜெயலலிதா அரசு அவர்களுக்கு உதவி செய்தது.
மற்ற நிறுவனங்களோடு இதனை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால்- 2003-2004-ல் பாலாஜி டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் விற்பனை 25.58 சதவிகிதம் என்பது 2005-2006-ல் 22.08 சதவிகிதமாக குறைந்தது. சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் விற்பனை 2003-2004-ல் 25.34 சதவிகிதம் என்றிருந்தது, 2005-2006-ல் 19.40 சதவிகிதமாக குறைந்தது. மோகன் டிஸ்டிலரீஸ் நிறுவனத்தின் விற்பனை அது போலவே 25.43 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து 13.06 சதவிகிதமாக குறைந்தது. ஆனால் மிடாஸ் நிறுவனத்தின் விற்பனை மட்டும் 4.68 சதவிகிதம் என்பதிலிருந்து 22.49 சதவிகிதமாக பெருகியது என்றால், அ.தி.மு.க. அரசு இந்த நிறுவனத்திற்கு மட்டும் காட்டிய அக்கறை என்பது புரிகிறதா இல்லையா?
மிடாஸ் நிறுவனத்தின் சரக்குகளை மட்டும் இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து ஜெயலலிதா அரசு விற்பனை செய்தது ஏன்? இதற்காகத்தான் சில்லரை வியாபாரத்தை அரசே எடுத்து நடத்தியதா? அரசின் வருவாயைப் பெருக்குவதாக கூறி, தனது பினாமி நிறுவனத்தின் விற்பனையை அதிகரித்தது எப்படிப்பட்ட குற்றம்? இதற்கு ஜெயலலிதாவின் பதில் என்ன? மதுபான வியாபாரமே ஒட்டுமொத்தமாக தமது பினாமியின் கஜானாவிற்கு போய்ச் சேரத் திட்டமிட்ட சதியா அல்லவா இது என்றெல்லாம் கடந்த கால ஆட்சியில் நான் விடுத்த அறிக்கைக்கு அரசின் சார்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.
இந்த அளவிற்கு ஊழல்களைச் செய்து விட்டு- அவற்றையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு -"ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்; உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்'' என்பதைப் போல அறிக்கை விட்டிருக்கிறார்! அவர் ஆட்சியில் நடைபெற்ற விவரங்களை நான் விளக்கியிருக்கிறேன். தற்போது அவர் அறிக்கையிலே தெரிவித்த தகவலுக்கான ஆதாரங்களை வெளியிடத் தயாரா? என்று கூறியுள்ளார் கருணாநிதி.