ரூ. 9,000 கோடியில் டெல்லி விமான நிலையத்தில் புதிய டெர்மினல்
டெல்லி: ரூ. 9,000 கோடி செலவில் கட்டப்பட்ட டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3வது முனையத்தை (டெர்மினல்) பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.
ஜிஎம்ஆர் நிறுவனத்தால் 37 மாதங்களில் இந்த மாபெரும் முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இது 6வது மிகப் பெரிய டெர்மினலாகும்.
மொத்தம் 54 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த டெர்மினல் துபாய், பெய்ஜிங், சிங்கப்பூர், பாங்காக், மெக்ஸிகோ சிட்டி ஆகிய விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விமான நிலையமாகும். இந்த டெர்மினலில் ஒரே நேரத்தில் மூன்று ரன்வேக்களை பயன்படுத்த முடியும்.
லவுஞ்சுகள், ஹோட்டல்கள், பார்கள் உட்பட பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்ட 60,000 சதுர அடி பரப்பளவுள்ள வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உணவக பகுதி மட்டுமே 20,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த டெர்மினலில் உள்ள 6.4 கி.மீ. நீள கன்வேயர் பெல்ட்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் 12,800 பயணிகளின் உடைமைகளைக் கையாள முடியும்.
பல அடுக்கு கார் நிறுத்தத்தில் 4,300 கார்களை நிறுத்த முடியும்.
இந்த முனையம் மூலம் டெல்லி விமான நிலையத்தால் ஆண்டுக்கு 3.40 கோடி பயணிகளைக் கையாள முடியும். அதே போல இப்போது கையாளப்படும் விமானங்களைப் போல நான்கு மடங்கு விமானங்களைக் கையாளலாம்.
இதை திறந்து வைத்து மன்மோகன் சிங் பேசுகையி்ல், இந்த முனையம் மூலம் சர்வதேச விமான வரைபடத்தில் இந்தியா மிக முக்கிய இடம் பெற்றுள்ளது.
இந்தியாவில் விமான போக்குவரத்தில் டெல்லியும் மும்பையும் அடுத்த சில ஆண்டுகளில் மிக முக்கியமான நகரங்களாக இடம்பெறப் போகின்றன.
அடுத்த பத்து ஆண்டுகளில் இந்திய விமானத்துறைக்கு ரூ. 6 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. இத்தகைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் நமது கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த டெர்மினலை உருவாக்க 58 அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன.
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை 16 கோடியிலிருந்து 18 கோடியாக அதிகரிக்கவுள்ளது. சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 50 கோடியாக உயரும்.
2007ம் ஆண்டு டெல்லி விமான நிலையம் சர்வதேச தர வரிசையில் 101வது இடத்தில் இருந்தது. இப்போது 21வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றார்.