ஒசூர், களியக்காவிளை, வாலையாறில் இறக்கிவிடப்பட்ட பெங்களூர், கேரளா பயணிகள்
ஒசூர்& சென்னை: கேரளாவிலும் கர்நாடகத்திலும் பந்த் பந்த் முழு அளவில் நடைபெற்றதால் அந்த மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக வாகனங்கள் மாநில எல்லையுடன் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதனால் பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகர்களுக்குச் சென்ற பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாயினர்.
காலை 4.30 மணி வரை தமிழகத்திலிருந்து பெங்களூர், கேரளம் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் நிறுத்தப்பட்டுவிட்டன.
கேரளாவுக்கு செல்லும் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து அனைத்து வாகனங்களும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள வாலையாறு சோதனைச் சாவடியுடன் நிறுத்தப்பட்டுவிட்டன.
இந்த எல்லைப் பகுதிகளுடன் தமிழக பஸ்கள் திரும்பி வந்துவிடுவதால் அதில் பயணித்தவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
ஒசூருடன் பஸ்கள் நிறுத்தம்:
அதே போல தமிழகத்தில் இருந்து கர்நாடகம் சென்ற பேருந்துகள், லாரிகள் அனைத்து ஒசூருடன் நிறுத்தப்பட்டுவிட்டன. ஒசூரில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் இரு மாநில அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன.
இதனால் ஒசூருடன் இறக்கிவிடப்பட்ட தமிழக பயணிகள் பெங்களூரை அடைய பெரும் சிரமப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் ரயில்கள் மூலம் பெங்களூரை அடைந்து வருகின்றனர். இதனால் ஒசூரில் ரயில்களில் பெரும் கூட்டம் ஏறி வருகிறது.
ஒசூர் எல்லைப் பகுதியில் கர்நாடகம் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் நீண்ட அனுமார் வால் போல சாலையோரமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அதே போல கர்நாடகத்தில் இருந்து தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரம், ஆந்திராவிலிருந்து கர்நடகத்துக்கு இன்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந் நிலையில் பெங்களூரில் இன்று நடக்கவிருந்த கர்நாடக மருத்துவ, பொறியியல் கல்லூரிகள் சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான தமிழக மாணவர்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.