தமிழகத்தில் பந்த் தோல்வி-திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு
கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்களில் மட்டுமே பந்துக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.
மாநிலம் முழுவதும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓரளவுக்கு இயங்கின. லாரிகள் தான் முழுமையாக ஓடவில்லை.
பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அத்தியாவசியப் பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தடையின்றி நடைபெற்றது.
தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. ஆனால், இந்தப் போராட்டத்தில் பாமக, தேமுதிக பங்கேற்கவில்லை.
தொழிற்கூடங்கள் இயங்கவில்லை:
வணிகர் சங்கப் பேரவை பந்த்தில் கலந்துகொள்ளாது என அறிவித்ததால் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
திருப்பூர், நீலகிரி, கரூர் ஸ்தம்பிப்பு:
கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் தான் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் நிறைந்த கரூர் மாவட்டத்தில் பந்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. தனியார் பஸ்கள் இயங்கவில்லை. வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ், கொசுவலை கம்பெனிகள், சாயப்பட்டறைகள், டீ கடை போன்றவை முழுவதுமாக மூடப்பட்டிருந்தன.
ஆனால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் கல்லூரிகள், அரசு பேருந்துகள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை வழக்கம் போல் இயங்கின.
திருப்பூரில் பந்த் முழு அளவில் இருந்தது. அங்கு பெரும்பாலான கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் முற்றிலும் இயங்கவில்லை.அரசு பஸ்களில் கூட்டம் இல்லாமல் குறைந்த அளவிலேயே ஓடின.
இங்கு 2.5 லட்சம் பின்னலாடைத் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சுமார் 10,000 பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
அவிநாசியில் 1 லட்சம் பனியன் தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் முழுமையாக ஈடுபட்டனர்.
வெள்ளக்கோவிலில் கழிவுப் பஞ்சு ஆலைகள் முற்றிலும் மூடப்பட்டன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
அதே போல தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் விசைத்தறிக் கூடங்கள் மூடப்பட்டிருந்தன.
கோவையில்...:
கோவையிலும் பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசுப் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. இங்கு ஆட்டோக்களும் பெருமளவில் ஓடவில்லை.
அதே போல நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரிலும் கடைகள் பெருமளவில் அடைக்கப்பட்டிருந்தன..
சின்னசேலம், கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
சென்னையில்..
சென்னையில் அரசுப் பேருந்துகள் இயங்கின. ஆனால் அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக்கில் பங்கேற்றிருப்பதால் முழு அளவில் பஸ்கள் ஓடவில்லை.
முக்கியச் சாலைகளில் வழக்கமாக காணப்படும் போக்குவரத்து நெரிசல் காணப்படவில்லை. பெருமளவில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
லாரிகள் ஓடவில்லை
அதே நேரததில் தமிழகம் முழுவதும் லாரிப் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
கேரளாவில் பந்த் முழு அளவில் நடைபெறுவதால் கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அனைத்தும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. அதேபோல கோவை மாவட்டத்தில் வாலையாறு சோதனைச்சாவடியுடன் லாரிகள் அனைத்தும் சாலையோரமாக நிறுத்தப்பட்டன.
பந்தையொட்டி நேற்று முதலே தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்கள் மற்றும் நீண்ட தூரம் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டு விட்டன. இவை ஆங்காங்கே உள்ள லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், பெட்ரோல் பங்குகள், லாரி பட்டறைகளில் நிறுத்தப்பட்டிருந்தன.
நாமக்கல்லில் இருந்து வெளிமாநிலம் செல்லும் லாரிகள் நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
பலத்த பாதுகாப்பு:
மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார். ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கடைகளை மூடச் சொல்லி யாரேனும் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பந்த் வெற்றி:
காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் புதுச்சேரியில் பந்த் கிட்டத்தட்ட முழு வெற்றி அடைந்துள்ளது. அங்கு கடைகள் முழு அளவில் அடைக்கப்பட்டிருந்தன.
வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. தனியார் பேருந்துள் ஓடவில்லை. தனியார் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே ஓடின. ஆட்டோக்கள் ஓடவில்லை. போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துப் போயிருந்தது.
காரைக்காலிலும் பந்த் முழு வெற்றி பெற்றுள்ளது. அங்கும் தனியார் பள்ளிகள், பஸ்கள் இயங்கவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.













Click it and Unblock the Notifications