பள்ளி தோழியுடன் டோணி திடீர் கல்யாணம் ஏன்?
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ். டோணிக்கு மிக அவசரமாக திருமணம் நடந்தது குறித்து இதுதான் காரணம் என சில பல காரணங்கள் கிசுகிசுக்களாக வெளியாக ஆரம்பித்துள்ளன.
டோணிக்கும், அவரது பள்ளித்தோழி சாக்ஷி சிங் ராவத்துக்கும் நேற்று முன்தினம் இரவு திடீரென டேராடூனில் நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று இரவே திடீரென கல்யாணத்தையும் முடித்து வைத்து விட்டனர்.
பிரபலங்கள் விவகாரத்தில் இதுபோல திடீர் திடீரென எது நடந்தாலும் அது வியப்பதற்கில்லை. இருந்தாலும் திடீரென கல்யாணம் நடந்ததற்கு என்ன காரணம் என்ற அலசல்கள் கிளம்பியுள்ளன.
அதில் ஒரு காரணம், சற்று வில்லங்கமாக தெரிகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்றும் தெரியவில்லை. அது, டோணியை மணந்திருக்கும் சாக்ஷி கர்ப்பமாக இருக்கிறார் என்பது. அதனால்தான் நிச்சயதார்த்தத்தையும், திருமணத்தையும் மின்னல் வேகத்தில் நடத்தி முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் திருமணத்தின்போதும் சரி, நிச்சயதார்த்தத்தின்போதும் சரி மிகமிக நெருங்கியவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மீடியாக்களும் கூட அந்தப் பக்கம் கூட வராமல் கடுமையான பாதுகாப்பைப் போட்டு பார்த்துக் கொண்டனர்.
அதேசமயம், ஜாதகப்படி டோணிக்கு விரைந்து கல்யாணம் செய்து வைத்துள்ளதாக இன்னொரு செய்தி கூறுகிறது. அவரது ஜாதகப்படி தற்போது கிரக பலன்கள் சாதகமாக இருப்பதால் உடனே கல்யாணத்தை முடித்து விடுமாறு ஜோதிடர் ஒருவர் கூறினாராம். இதனால்தான் சட்டுப்புட்டென்று முடித்து வைத்து விட்டதாக இன்னொரு தகவல் கூறுகிறது.
இந்தக் கல்யாணம் அவசரம் அவசரமாக நடத்தப்படவில்லை, திட்டமிட்ட ஒன்றுதான் இது என்று டோணியின் தோழிகளில் ஒருவரான பிபாஷா பாசு கூறியுள்ளார்.
ஆனால் இவர் கல்யாணத்திற்கு அழைக்கப்படவில்லை. ஆனால் பிபாஷாவின் தோழரான ஜான் ஆப்ரகாம் போயிருந்தார். ஜான், டோணியின் நெருங்கிய தோழர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டேராடூனிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விஸ்ராந்தி ரிசார்ட்ஸில் இந்தத் திருமணம் நடந்தது. மொத்தமே 60 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், ஆசிஷ்நெஹ்ரா, ஆர்.பி.சிங், சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா ஆகியோரும் அடக்கம்.
அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், பிசிசிஐ செயலாளருமான சீனிவாசனும் கலந்து கொண்டார்.
சினிமா நடிகர் ஜான் ஆப்ரகாம், இயக்குநர் பாரா கான் ஆகியோரும் வந்திருந்தனர்.
திருமணத்தையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
டோணிக்கு வருகிற 7ம் தேதி 29வது பிறந்த நாளாகும். அன்று மும்பையி்ல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாக்ஷி உ.பி. மாநிலம் ஒளரங்கபாத்தைச் சேர்ந்தவர். ராஞ்சியில் அவருடைய தந்தை பணியாற்றியபோது டோணி குடும்பத்தினருடன் நட்பு ஏற்பட்டது. டோணியும், சாக்ஷியும், ராஞ்சியில் உள்ள டிஏவி பள்ளியில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.