மதுரையில் சிபிஎம் அலுவலகங்களுக்கு திமுகவினர் தீ வைப்பு
மதுரை: மதுரை நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், படிப்பகம் ஆகியவற்றிற்கு திமுகவினர் தீ வைத்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் இரா.அண்ணா துரை விடுத்துள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வைக் கண்டித்து நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு இடது சாரிக் கட்சிகள் விடுத்த அறைகூவலுக்கு அதிமுக, மதிமுக, மதச்சார்பற்ற ஜனதாதளம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் நேற்று மதுரை மாநகரில் அனைத்து கடைகளையும் அடைத்து வணிகர்களும் பொது வேலை நிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
மக்கள் மத்தியில் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு பெருகுவதை பொறுக்க முடியாமல், மதுரை பாரதியார் ரோட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மேலப் பொன்னகரம் பகுதிக்குழு அலுவலகத்திற்கு திமுகவினர் தீ வைத்துள்ளனர்.
இதில் அலுவலகத்தின் கதவு, விளம்பரப்பலகை ஆகியவை சேதமடைந்துள்ளது.
இதே போல் ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள கார்க்கி படிப்பகத்திற்கும் திமுகவினர் தீ வைத்துள்ளனர். இதில் படிப்பகத்தின் மேல்கூரை எரிந்துள்ளது. அருகில் இருந்த மருத்துவமனையின் காவலாளியால் இந்த தீ விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை காவல்துறையினர் அவரவர் அலுவலகங்களில் வைத்து கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மதுரை நகரில் ஆளுங்கட்சியினர் இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
மதுரை நகர காவல்துறை இது போன்ற நடவடிக்கைகளை வேடிக்கை பார்ப்பதை ஏற்க முடியாது. தமிழக முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையைச் சேர்ந்த சிலரால் மதுரையில் அது திமுகவின் ஏவல்துறையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பொது வேலைநிறுத்தத்தின் போது வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால், அவருடைய கட்சிக்காரர்கள், மதுரை நகரில் நடத்தும் வன்முறையை காவல்துறை கண்டும் காணாமல் உள்ளது.
அறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதை மீறி கடமை, கண்ணியம், தட்டுப்பாடு என்ற வகையில் ஆளும் திமுகவின் நடவடிக்கைகளை பொதுமக்கள் முறியடிப்பார்கள் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications