இந்தியாவில் சிகிச்சை பெற பார்வதி அம்மாளுக்கு விருப்பமில்லை-உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் பக்கவாதத்திற்கு சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து சிரமப்பட்டு சென்னை வந்தார். ஆனால் மத்திய அரசு அவரை விமானத்திலிருந்து இறங்கக் கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விட்டது.
இதையடுத்து அவர் இலங்கைக்கே போய் விட்டார். இந்த நிலையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதைப் பரிசீலித்த மத்திய அரசு, கடுமையான நிபந்தனைகளை விதித்து பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வரலாம் என அறிவித்தது.
ஆனால் இவற்றை பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார். இதையடுத்து மீண்டும் மத்தியஅரசுக்கு தமிழக அரசு இதுதொடர்பாக கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து நிபந்தனைகளை தளர்த்தியது மத்திய அரசு. ஆனால் பார்வதி அம்மாளுக்கு இந்தியா செல்லும் எண்ணமே இல்லை என்று அவரது உறவினர் சிவாஜிலிங்கம் கூறி விட்டார்.
இந்த நிலையில், பார்வதி அம்மாள் சிகிச்சை பெற மத்திய அரசு அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பார்வதி அம்மாளின் விருப்பத்தை தெரிந்து பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இன்று இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன், ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் மற்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், கோர்ட் உத்தரவின்பேரில் கொழும்பில் இருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் 2 பேர் கொழும்பில் சிகிச்சை பெற்று வரும் பார்வதி அம்மாளை நேரில் சந்தித்தனர். அவர் சுயநினைவுடன் பேசக்கூடிய நிலையில் இருந்தார்.
அப்போது இந்தியாவில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு எங்கள் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய தயாராக இருக்கிறோம். நீங்கள் எப்போது வருகிறீர்கள் என்ற விருப்பத்தை சொல்லுங்கள் என்று தெரிவித்தனர்.
அதற்கு அவர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். அவருடன் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தம் கவனித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி விட்டனர். மறுநாள் சம்பந்தம் எங்களிடம் பார்வதி அம்மாள் சார்பில் பதில் கொடுத்தார். அதில் இப்போது பார்வதி அம்மாள் இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற விரும்பவில்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சொல்கிறோம். இதுதான் அவரது விருப்பம் என்று தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை வழக்கை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.