தமிழகத்தில் பாஜக-அதிமுக- கம்யூனிஸ்ட் பந்த் தோல்வி ஏன்?: கருணாநிதி விளக்கம்

அவர் வெளியிட்டுள் அறிக்கை: பாஜக- அதிமுக- இடதுசாரிகள் ஓர் அணியில் திரண்டு ஜுலை 5ம் தேதி இந்தியாவையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு ஒரு "பந்த்'' நடத்தப் போகிறோமென்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்புக்கு ஊடகங்கள் கூரேற்றி ஓரிடத்தில்கூட சோடை போகாமல் அந்தப் "பந்த்'' நடைபெற வேண்டுமென்று, மதவாத சக்திகளான பாஜகவினரும், இடதுசாரி அணியினரும், அதிமுகவினரும் அறிக்கை விடுத்ததோடு, அந்த பந்த் மகத்தான வெற்றி பெற வேண்டுமென்பதற்காக, பந்த் பற்றிய பரபரப்பான செய்திகளையெல்லாம் வெளியிட்டு, அவற்றைப் பரப்பியும் வந்தார்கள்.
பொதுவாக பந்த், வேலை நிறுத்தம் போன்றவை தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்த வேண்டிய நிலை இருக்குமானால் அதனை நான் என்றைக்கும் எதிர்த்து எந்தவிதமான கருத்தும் தெரிவித்ததில்லை. கூறப்படும் குறிக்கோள், கொள்கை, கோரிக்கை இவற்றை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோர் யாராயினும் அவர்களை நாம் சந்தேகித்ததில்லை. "சபாஷ்'' என்று தட்டிக் கொடுக்கவும் தவறியதில்லை!.
ஆனால் கூறப்படும் குறிக்கோள், கொள்கை இவற்றில் எவ்வளவு நியாயமிருந்தபோதிலும் அவற்றை அடைவதற்கான வழிமுறைகளில் வாய்மை தவறினாலோ அல்லது வன்முறை தலை காட்டினாலோ- அப்போது குறிக்கோள் வெற்றிக்கு இரண்டாவது இடத்தையும், வழிமுறை தவறாத வாய்மையான நிலைக்கு முதல் இடத்தையும் தருபவர்கள் நாம்.
இலங்கைத் தமிழர் பிரச்சனை, விலைவாசி உயர்வு போன்ற எத்தனையோ பிரச்சனைகளில் மக்கள் நலனை முன் வைத்து நாம் தனித்து நின்றும், பிற கட்சிகளின் துணை கொண்டும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். ஆனால், ரயில் நிறுத்தம், பேருந்து மறித்தல் கிளர்ச்சிகளை திடுதிப்பென்று நாம் நடத்தியதில்லை.
குறிப்பிட்ட ஒரு தேதியில் குறிப்பிட்ட ஓர் இடத்தில் காலையோ, மாலையோ பெயர் குறிப்பிட்ட இந்தத் தோழர்கள் இந்த நேரத்தில் ரயில் நிறுத்தப் போராட்டத்திலோ பேருந்து மறித்தல் போராட்டத்திலோ ஈடுபடுவர் என்று அறிவிக்கப்பட்டு அவர்கள் எந்த இடத்திலிருந்து எத்தனை மணிக்குப் புறப்பட்டு அந்த இடத்திற்கு வருவார்கள் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினரும் அந்த இடத்திற்குச் சென்று அவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பார்கள்.
தந்தை பெரியாரின் ஆணைப்படி...:
இது இன்று நேற்றல்ல; 1938ம் ஆண்டு கட்டாய இந்தியை எதிர்க்க சென்னை தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளி வாசலில் தந்தை பெரியாரின் ஆணைப்படி தமிழர் படையினர் நடத்திய திராவிட இயக்கத்தினருடைய மொழிப் போராட்டத்திலிருந்து இன்று வரை நாம் கடைப்பிடித்து வரும் முறையாகும்.
பட்டாக் கத்திகளுடன் பாஜக மகளிர் அணி:
ஆனால் இடதுசாரிகளும், பாஜகவினரும், அதிமுகவினரும் அணி சேருகிறார்கள். அந்த அணியில் அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்தக் கிளர்ச்சியில் அமைதி கெடக் கூடாது என்பதை வலியுறுத்தினாம் கூட- அதையும் மீறியோ அல்லது அத்வானியின் அறிவுரைக்கு இதுதான் பொருள் என்று கருதிக் கொண்டோ; இதோ பாட்னாவில் பாவையர் பட்டாளம் படையெடுத்து பாதையை மறைக்கும் காட்சியையும்- அவர்கள் கரங்களில் பளபளக்கும் பட்டாக் கத்திகளையும் பார்க்கும்போது "பாரத் பந்த்'' நடத்தியவர்களே- இவற்றை விரும்பினார்களோ என்று ஐயுறத்தான் வேண்டியிருக்கிறது.
எப்படியோ தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த முழு அடைப்புக்கு ஆதரவில்லை என்பதையும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேருந்துகள் மீது கல் வீச்சுகள் நடைபெற்று சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்கள் என்பதைத் தவிர வேறு எந்தப் பாதிப்பும் இல்லையென்றும் பாஜக, இடதுசாரிகள் ஆளுகின்ற மாநிலங்களில்தான் இயல்பு வாழ்க்கை முடங்கியதாகவும் இந்த அணியின் ஆதரவு ஏடுகள் செய்தி வெளியிட்டிருப்பதில் இருந்தே,
தமிழகத்தில் என்னதான் அதிமுக, பாஜக போன்ற பெரிய கட்சிகள் அணி வகுத்து நின்றாலும், விலைவாசி உயர்வு என்ற கோஷம்- அதனால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவில் மற்ற மாநிலங்களைப் போல தமிழ் மாநில மக்களைப் பாதிக்கவில்லை என்பதும்- அப்படிப் பாதிக்காத அளவிற்கு அவர்களைப் பாதுகாக்கும் கடமையை இங்குள்ள நமது அரசு நிறைவேற்றி வருகிறது என்பதும், அதனால்தான் பூதாகாரமாக எதிர்பார்த்த "பந்த்'' வெற்றி பெறவில்லை என்பதும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
ஆட்சிக்கு வரும் நாட்களை மட்டும் எண்ணுவோர்...:
இதைச் சொல்வதால் விலைவாசி உயர்வுக்கு வெண்சாமரம் வீசுபவர்கள் அல்ல நாம்; மற்ற மாநிலங்களைப் போல அல்லாமல் தமிழ் மாநிலத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய் என்பதும், மானிய விலையில் மளிகைச் சாமான்களைப் பெற முடியும் என்பதும், பஸ் கட்டண உயர்வில்லை என்பதும், விலைவாசி உயர்வின் பாதிப்பை சாதாரண- சாமான்ய மக்களிடமிருந்து அகற்றியிருப்பதை எண்ணிப் பார்த்தால் முழு உண்மையும் புலப்படும்.
எண்ணிப் பார்க்க முன்வராமல்; எப்போது தங்கள் ஆட்சி வரும் என்பதற்காக மாத்திரம் நாள்களை எண்ணிக் கொண்டிருப்போருக்கு; "பாரத் பந்த்''- பாதை மறியல்- பட்டாக் கத்தி வீச்சு- இவற்றால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை!
இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications