சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பதிவாளர் ரத்தினசபாபதி, பொறியியல் துறை தலைவர் பழனியப்பன் ஆகிய இருவருக்கும் பணி ஓய்வு பெற்ற பிறகும் இரண்டு முறை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இவர்களுக்கு மேலும், பணி நீட்டிப்பு வழங்க கூடாது என்று வலியுறுத்தி பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நேற்று வரை (செவ்வாய்கிழமை) 6 நாட்களாக துணை வேந்தர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது. இதில் 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி அளித்த புகாரின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 12 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறையில் அடைத்தனர்.