அட்வகேட் ஜெனரலுக்கு கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன் தினம் நடந்த பந்த்தின்போது நீதிமன்ற ஊழியர்களையும், வக்கீல்களையும் போராட்டக்காரர்கள் பணிக்கு செல்ல விடாமல் தடுத்ததை அடுத்து அட்வகேட் ஜெனரலை நீதிமன்றத்துக்கு வரவழைத்து தலைமை நீதிபதி எச்சரித்தார்.
எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் அருகே நேற்று முன் தினம் பந்த் நடத்தியவர்கள், உயர்நீதிமன்ற ஊழியர்கள், வக்கீல்களை நீதிமன்றத்திற்கு செல்லவிடாமல் தடுத்தனர். இதுகுறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அட்வகேட் ஜெனரல் சுதாகர பிரசாத்தை உடனடியாக உயர் நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு அவர் உத்தரவிட்டார்.
அவரிடம், வக்கீல்கள் மற்றும் ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்த ஆர்ப்பாட்டக்காரர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று நீதிபதி கூறினார்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல் இந்த சம்பவம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதியளித்தார்.