இலங்கை கடற்படை தாக்குதலில் தமிழக மீனவர் பலி: நிர்வாணமாக்கி அடித்த கொடுமை
நாகப்பட்டனம்: இலங்கை கடற்படை வெறியர்கள் நடத்திய தாக்குதலில் நாகை மாவட்ட மீனவர் பலியானார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வெள்ளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லப்பன், காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகியோர் நேற்று ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர்.
மற்றொரு படகில் அதே பகுதியை சேர்ந்த முருகேசன், அறிவழகன், சின்னப்பூ, இளையராஜா ஆகிய 4 பேர் சென்றனர்.
இரவு 9 மணியளவில் அவர்கள் ஆறுகாட்டுத்துறை அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தாக்கினர்.
படகுகளில் இருந்த மீன்கள், வலைகளை தூக்கி கடலில் வீசினர். பின்னர் மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர். படுகாயமடைந்த செல்லப்பன் படகிலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
தாக்குதலில் காளியப்பன், செல்வராஜ், திருவன்புலம் ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். பின்னர் சிங்கள கடற்படையினர் சிறிது தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த முருகேசனின் படகை வழிமறித்து அதில் ஏறினர்.
படகில் இருந்த மீன்கள் மற்றும் வலைகளை கடலில் கொட்டிவிட்டு மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கினர்.
மீனவர்கள் அணிந்திருந்த உடைகளை கழற்றச் செய்து அதை கடலில் வீசினர். முழு நிர்வாணத்துடன் 4 மீனவர்களையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். இதில் 4 பேரும் படுகாயமடைந்தனர்.
பின்னர் இலங்கை கடற்படையினர் திரும்பிச் சென்றனர். தாக்குதலில் காயம் அடைந்த 7 பேரும் செல்லப்பனின் உடலோடு நள்ளிரவில் கரை திரும்பினர்.
மீனவர்களிடம் மீன்வளத்துறை இணை இயக்குனர் உமாகாந்தன் இன்று விசாரணை நடத்தினார்.
இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் செல்லப்பன் பலியானதால் வெள்ளம்பள்ளம், ஆறுக்காட்டுதுறை மீனவ கிராமங்களில் பதட்டம் நிலவுகிறது.
இலங்கை மீனவர்களை தாக்குவதில்லை-இந்திய கடற்படை:
இந் நிலையில் இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போது, நாங்கள் அத்துமீறி நடப்பதில்லை என்று இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய தலைவர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இலங்கை கடற்படையினர் இந்திய கடற்பகுதிக்கு வர வாய்ப்பே இல்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் நுழைவதால்தான் தாக்கப்படுகிறார்கள்.
நாகப்பட்டினம் இந்திய கடல் எல்லையில் இருந்து 60 மைலுக்கு உள்ளே உள்ளது. இந்திய மீனவர்கள் எல்லையை தாண்டி மீன்பிடிக்க செல்வதாகத் தான் எங்களுக்கு தகவல் வருகிறது.
தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நாங்கள் மறுக்கவில்லை. இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்களை பார்த்தால் தகவல் தருமாறும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் பலமுறை இலங்கை கடற்படையிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இலங்கை மீனவர்கள் இந்திய எல்லையில் மீன்பிடிக்கும்போது, நாங்கள் அத்துமீறி நடப்பதில்லை என்றார்.