மீனவர் படுகொலை: இலங்கை தூதரகம் முன் கூடி திமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: நாகை மீனவர் செல்லப்பன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து திமுக மீனவர் அணி சார்பில் இன்று சென்னையில் இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் என்பவரை இலங்கை கடற்படை காடையர்கள் ஈவு இரக்கமின்றி அடித்தே கொன்றனர். இந்த செயல் தமிழக மீனவர்களிடையே மட்டுமல்லாமல் தமிழக மக்களிடமும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடல் தாண்டி தமிழகத்தின் மீதும் இலங்கை போர் தொடுத்து வருவதாக மக்கள் கருதுகின்றனர். இதை தட்டிக் கேட்காமல் சால்ஜாப்பாக பேசி வருகிறது மத்திய அரசு.
இலங்கையின் செயலைக் கண்டித்து அறிக்கை விட்ட முதல்வர் கருணாநிதி, பிரதமர், மத்திய பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். மேலும் திமுக மீனவர் அணியும், இலங்கைத் துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என அறிவித்தது.
அதன்படி இன்று காலை மீனவர் அணிச்செயலாளர் பெர்னார்ட் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுகவினர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு இந்த செயலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கையின் செயலைக் கண்டித்தும் கோஷம் போட்டுவிட்டு கலைந்து சென்றனர்.