பேரணிகள்: மாணவர்களுக்கு சென்னையில் தடை!
பல்வேறு நோக்கங்களுக்காக நடக்கப்படும் பேரணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது என்று சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.
சென்னையில் தினசரி ஏதாவது ஒரு காரணத்திற்காக பேரணிகள் நடத்துவது வழக்கம். புகையிலை எதிர்ப்பு வாரம், எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி என பல்வேறு பேரணிகள் நடத்தப்படுகிறது.
இந்தப் பேரணிகளில் பெருமளவில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்துகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர்களை கடும் வெயிலில் காக்க வைத்து முக்கியப் பிரமுகர்கள் வந்த பின்னர் பேரணியாக அனுப்புவது வழக்கம். அதிலும் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர்கள் நி்லைதான் மோசம்.
கடும் வெயிலில் கால் கடுக்க நடந்து சென்று மயக்கம் போடுபவர்கள் பலர். இதுகுறித்து பெற்றோர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து மாநகராட்சி பள்ளி மாணவர்களை பேரணிகளில் பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு மாநகராட்சி வந்துள்ளது.
இதுதொடர்பாக வருகிற 29ம் தேதி நடைபெறும் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாம்.
இதுகுறித்து மேயர் மா.சுப்ரமணியன் கூறுகையில்,
பள்ளி விழாக்களுக்கு அமைச்சர்கள், மேயர் யார் வந்தாலும் வரவேற்க மாணவர்களை பயன்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த தடை அமுலில் உள்ளது.
பேரணிகளில் மாணவர்கள் பங்கேற்பதை தடை செய்யவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.