தீபாவளி முடியும் வரை சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை தொடரும்
கிட்டத்தட்ட 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய உணவுத்துறையின் அனுமதியைக் கோரி சர்க்கரை ஆலைகள் காத்துள்ளன. ஆனால் மத்திய அரசு இதுவரை அனுமதி தரவில்லை. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் விரைவில் வரவுள்ளதால், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி கொடுத்தால் உள்ளூரில் பற்றாக்குறை ஏற்பட்டு விலை உயர்வுக்கு அது வித்திட்டு விடும் என்பது உணவுத்துறையின் எண்ணம்.
கடந்த 2004-05ம் ஆண்டில் இந்திய சர்க்கரை ஆலைள் 20.75 லட்சம் டன் சர்க்கரையை இறக்குமதி செய்தன. அப்போது உற்பத்தி குறைவாக இருந்தது.
அதேசமயம்,தற்போது உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் கிட்டத்தட்ட 21 லட்சம் டன் அளவு சர்க்கரையை இந்திய சர்க்கரை ஆலைகள் ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்க்கரையை ஏற்றுமதி செய்ய தொடர்ந்து மத்திய உணவுத் துறையை சர்க்கரை ஆலை நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. தீபாவளிக்குப் பிறகே ஒரு முடிவுக்கு மத்திய அரசு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது