மராத்தி பாட்டுகளை ஒலிபரப்ப வேண்டும்-எப்எம் நிலையங்களுக்கு பால் தாக்கரே எச்சரிக்கை
மும்பை: மகாராஷ்டிராவில் உள்ள எப்எம் நிலையங்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சிவசேனா தலைவர் பால் தாக்கரே எச்சரித்துள்ளார்.
'மராத்தி' தொடர்பாக பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு பால் தாக்கரே, ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோர் ஒவ்வொரு துறையினராக பிடித்து தாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது எப்.எம். வானொலி நிலையங்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தனியார் எப்எம் வானொலி நிலையங்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்புவதே இல்லை என்பது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
வாரத்தின் ஏழு நாட்களும் அவர்கள் மராத்தி பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். இன்றே அதை ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் சிவசேனாவின் போராட்டத்தை அவர்கள் சந்திக்க வேண்டி வரும். கடும் விளைவுகளை சந்திக்க அவர்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.