தேர்தல் பணியாற்ற 25 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்குத் தடையா?-துரைமுருகன் கண்டனம்
சென்னை: தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட தடைவிதித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டது கண்டனத்துக்குரியது. அப்படி எதுவும் விதிக்கப்படவில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாலைப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி உண்மையானதன்று. யாரோ வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யும் சூழ்ச்சி.
கடந்த 6-ம் தேதி மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் நவீன் சாவ்லாவும் மற்ற ஆணையர்களான எஸ்.ஒய்.குரேஷி, சம்பத் ஆகியோரும் தமிழகத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மண்டல காவல் துறை தலைவர்கள், மாநகர காவல்துறை ஆணையர்கள் மற்றும் காவல் துறை தலைவர், தமிழக அரசின் உள்துறை செயலாளர் ஆகியோர்களை சந்தித்து வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அந்த சந்திப்பின் போதும், அதன் பிறகும் மாலை பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியைப் பற்றி யாரும் பேசவில்லை.
இது தான் உண்மை நிலவரம். ஆனால், மாலை இதழ் ஒன்று மட்டும் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கட்சிகள் நடத்தும் பத்திரிகைகளில் இது போன்ற பொய்யான செய்திகள் வரலாம். ஆனால், நடுநிலையோடு நடத்தப்படுவதாகச் சொல்லிக் கொள்ளும் இந்த நாளிதழ் இவ்வாறு தவறான செய்திகளை ஒரு சில நாட்களாக வெளியிட்டு வருவது சூரியனை உள்ளங்கையால் மறைக்க முயற்சி செய்வது போலாகும். இந்த முயற்சி வீனாகத் தான் போகும், ஒரு போதும் பலிக்காது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications