திமுக அரசுக்குப் பாராட்டு விழா-சிபிஎம்மிலிருந்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ நீக்கம்
சென்னை: திமுக அரசுக்குப் பாராட்டு விழா நடத்தப் போவதாக கூறியிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் தலைவர் கோவிந்தசாமி கட்சியை விட்டு இன்று அதிரடியாக நீக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத் திட்டங்கள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளது. இதனால் இதற்கு காரணமான தமிழக அரசுக்கு ஆகஸ்ட் 1ம்தேதி பாராட்டு விழா நடத்தப் போகிறேன். அதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று கூறியிருந்தார் கோவிந்தசாமி.
இதையடுத்து பாராட்டு விழா நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு கோவிந்தசாமிக்கு அறிக்கை அனுப்பியிருந்தது.
ஆனால், அறிக்கைக்கு கோவிந்தசாமி உரிய பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கோவிந்தசாமி எம்எல்ஏ நீக்கப்படுவதாக அக் கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கடந்த ஒருவருடத்திற்கு முன்பு, திருப்பூர் தொழிலதிபர்களுடன் கோவிந்தசாமி முதல்வர் கருணாநிதியை சந்தித்தை அடுத்து, அக் கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கோவிந்தசாமியின் நீக்கத்தைத் தொடர்ந்து சட்டசபையில் சிபிஎம்மின் பலம் 9லிருந்து 8 ஆக குறைந்துள்ளது.
இதுவரை அதிமுகவை மட்டுமே பாதித்து வந்த 'திமுக ஆதரவு வைரஸ்' தற்போது சிபிஎம்மையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது!