மும்பையில் வானில் மோதிக் கொள்ள இருந்த இரு சென்னை விமானங்கள்

கடந்த சனிக்கிழமை நடந்த இந்ச சம்பவம் இன்று தான் வெளியி்ல் வந்துள்ளது.
142 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் (9W 2119) மும்பைக்கு சென்றது. அதே போல ஏர் இந்தியா விமானமும் (IC 174) 70 பயணிகளுடன் மும்பை சென்றது.
இரு விமானங்களும் ஒரே சமயத்தில் மும்பையை நெருங்கிய நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமானத்தை 11,000 அடி உயரத்துக்கு குறைக்குமாறு தரைக் கட்டுப்பாட்டு நிலையம் உத்தரவிட்டது.
இதையடுத்து அந்த விமானம் உயரத்தைக் குறைத்தது. அப்போது அந்த விமானத்தின் எச்சரிக்கை மணி (Collision Avoidance System) ஒலித்தது. இதையடுத்து மிக அருகில் இன்னொரு விமானம் இருப்பதை உறுதி செய்து கொண்ட விமானிகள் உஷாராயினர்.
அதே போல ஏர் இந்தியா விமானத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்கவே, அந்த விமானிகளும் உஷாராகினர்.
இதையடுத்து இரு விமானங்களின் விமானிகளும் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கு இந்தத் தகவலை தந்ததையடுத்து அவர்களுக்கு வெவ்வேறு உயரங்களில் புதிய பாதைகள் தரப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த விமானங்கள் திசை திருப்பப்பட்டன.
இதைத் தொடர்ந்து இரு விமானங்களும் அபாயகரமாக மிக அருகருகே ஒன்றை ஒன்று கடந்து சென்றன. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு இரு விமானங்களும் மும்பை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கின. இதனால் மும்பை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications