குளிக்க சென்றவர்களுடன் மோதல்: வனக்காப்பாளர்கள் இருவர் கைது
நெல்லை: குற்றாலம் அருவியில் குளிக்க சென்றவர்களுக்கும், வனக்காப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 வனக் காப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடியை சேர்ந்த பால்துரை என்பவரின் மகன் பிரபாகரன். நேற்று முன்தினம் இவர் தனது நண்பர் இளையபெருமாள் உள்ளிட்ட 5 பேருடன் மலையடி புதூருக்கு மேற்கே உள்ள வனப்பகுதிக்கு சொந்தமான தண்ணீர் தொண்டு என்ற இடத்தில் உள்ள அருவிக்கு குளிக்க சென்றார்.
அங்கு வனக் காப்பாளர்கள் ரகுமான், குமரகுரு ஆகியோர் தங்களது நண்பர்களுடன் சமையல் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்கள் பிரபாகரனிடம் அனுமதியின்றி நீங்கள் எப்படி வரலாம், என்று கேட்டனர். அதற்கு அவர் நீங்கள் மட்டும் உங்கள் நண்பருடன் வந்து சமையல் செய்து சாப்பிடலாம், நாங்கள் வரக்கூடாதா என்று கூறினார்.
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரகுமான் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து பிரபாகரனை தாக்கினர். இது தொடர்பாக அவர் திருக்குறுக்குடி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி வனக்காப்பாளர்கள் பாலமுருகன், குமரகுரு ஆகியோரை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இளையபெருமாள் தன்னை தாக்கியதாக பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே நேற்று வனத்துறையினர் ரோந்து சென்றபோது பிரபாகரன் உள்ளிட்ட 5 பேர் அரிவாளுடன் வேட்டையாடும் நோக்கில் சுற்றி திரிந்ததாகவும், அவர்களை பிடிக்க முயன்றபோது வனத்துறையினரை தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டதாகவும் வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த 2 அரிவாள், பைக்குகள் பறி்முதல் செய்யப்பட்டுள்ளன.