காலாவதி மருந்து விற்பனை செய்த 4 நிறுவனங்களின் உரிமம் ரத்து - மருந்து துறை அதிகாரிகள் அதிரடி
சென்னை : காலாவதியான மருந்தை விற்பனை செய்த அரும்பாக்கம் ஜி.எச். பார்மா, சூளையில் உள்ள மம்தா பார்மா, கணபதி ஏஜென்சிஸ், மதனந்தபுரத்தில் உள்ள கற்பகாம்பாள் பார்மசூட்டிகல்ஸ் ஆகிய மருந்து கம்பெனிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநர் பாஸ்கரன் கூறியதாவது:
தமிழகத்தில் காலாவதி மருந்து விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த நிருவனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து மீனாட்சி சுந்தரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால், இந்த நிறுவனங்களின் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.
காலாவதி மருந்து தொடர்பாக அரும்பாக்கம் ஜி.எச். பார்மா, சூளையில் உள்ள மம்தா பார்மா, கணபதி ஏஜென்சிஸ், மதனந்தபுரத்தில் உள்ள கற்பகாம்பாள் பார்மசூட்டிகல்ஸ் ஆகிய 4 நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஜாபர்கான் பேட்டை ஆர்.வி.நகரில் உள்ள வீ ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தில் சோதனை நடத்திய போது அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான போலி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
டாக்டர்களுக்கு வழங்கப்படும் சாம்பிள் மருந்துகள், காலாவதி மருந்துகள் போன்றவற்றை அவர்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஓவிரான் எஸ்.ஆர். 100 என்ற போலி மாத்திரை ஏராளமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த மருந்து எங்கு தயாரிக்கப்பட்டது, யார் யார் விநியோகம் செய்தார்கள் போன்ற விவரங்கள் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றோம் என்று அவர் கூறினார்.