மும்பையில் குளோரின் வாயு கசிவு: 59 பேர் பாதி்ப்பு-6 பேர் கவலைக்கிடம்!
இன்று காலை 4 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. மும்பை துறைமுகத்தில் உள்ள கண்டெய்னர் யார்டில் பயன்படுத்தப்படாத 12 குளோரின் வாயு சிலிண்டர்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை ஒரு சிலிண்டரில் இருந்து குளோரின் வாயு கசிந்தது. இதனால் துறைமுகம் மற்றும் ஹாஜி பாதர் பகுதியைச் சேர்ந்த லால் பகதூர் சாஸ்திரி கல்லூரியின் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 14 மாணவர்கள் உள்பட 59 பொது மக்களுக்கு மயக்கம், வாந்தி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் ஜேஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு இருதய கோளாறு ஏற்பட்டதால் அவர்கள் இருதய தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு 14 தீயணைப்பு வண்டிகள் வந்து அந்த சிலிண்டரில் வாயு கசிவை கட்டுப்படுத்தினர்.
விஷவாயு கசிந்ததை அடுத்து அந்தபகுதியில் இருந்த மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.