நக்ஸல்களை ஒடுக்க 34 பட்டாலியன்கள் கொண்ட புதிய படை
மேலும் நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் கூடுதலாக 400 காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நக்சல்கள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் தலா ரூ. 2 கோடி செலவில் கூடுதலாக 400 காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
.
நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
அதி்ல் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் பங்கேற்றார்.
இக் கூட்டத்தில் நக்சலைட்களை கட்டுப்படுத்துவது, அதற்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் சிதம்பரம் கூறியதாவது: நக்சலைட் தீவிரவாதத்தை ஒடுக்க எடுக்கப்பட வேண்டிய புதிய உத்திகள் குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஓய்வு பெற்ற ராணுவ மேஜரின் தலைமையில் ஒருங்கிணைந்த படை ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தப் படைக்காக 34 பட்டாலியன்கள் கொண்ட புதிய ரிசர்வ் படை உருவாக்கப்படும். இந்தப் படைக்கு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் தலைவராக இருப்பார்.
நக்சலைட்டு பாதிப்புள்ள 7 மாநிலங்களுக்கும் மத்திய அரசு கூடுதலாக ஹெலிகாப்டர்களை வழங்கும். வீரர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்து செல்ல, வீரர்களை ஏற்றி செல்ல, அவசர நேரத்தில் மீட்பு பணிகளை செய்ய இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேலும் கூடுதலாக 400 காவல் நிலையங்களை அமைத்து கண்காணிப்பை வலுப்படுத்த மத்திய அரசு நிதியுதவி அளிக்கும். 80:20 என்றரீதியில் இந்த நிதி அளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.
நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து மாநில அரசுகள் முன் முயற்சி எடுக்க வேண்டும். இந்த மாநிலங்களில் மாவட்டங்களுக்கிடையே, இணைப்பை ஏற்படுத்த ரூ.950 கோடி செலவில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டப்படும்.
நக்சல் பாதித்த மாவட்டங்களில் மேம்பாட்டு பணிக்காக சிறப்பு மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த திட்டக்குழு ஆலோசித்து வருகிறது. இந்தப் பகுதிகளில் சாலை வசதி, ஆரம்ப கல்வி, சுகாதாரம், குடி தணீர் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றார் சிதம்பரம்.