தேர்தல் பணி: தமிழக ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தடையா?-நரேஷ் குப்தா மறுப்பு
சென்னை: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பணியாற்ற தமிழக ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் யாரையும் தடை செய்வது தொடர்பான கேள்வியே இப்போது எழவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியுள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பணியாற்ற 25 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று செய்தி வெளியானது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சட்டஅமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு இந்தச் செய்தி காழ்ப்புணர்வோடு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசிலே பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந் நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் இது தொடர்பாக விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
தமிழ்நாட்டில் பணியாற்றும் 25 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள், தேர்தல் பணியாற்றுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தவறானது.
ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரி குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலோ அல்லது 3 ஆண்டுகள் பணியாற்றி முடித்திருந்தாலோ அல்லது கடந்த 4 ஆண்டுகள் பணியாற்றி இருந்தாலோ அவரை தேர்தல் தொடர்பான வேலைகளில் இருந்து மாற்றம் செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் கொள்கையாக கொண்டுள்ளது.
இந்த மாற்றம், குறிப்பிட்ட அதிகாரி பணியாற்றிய காலத்தை கணக்கிட்ட பின்னர் ஒரு தேதியை குறிப்பிட்டு மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிய பிறகே நடைமுறைக்கு வரும்.
மேலும், ஒரு அதிகாரி தவறாக செயல்படுகிறார் என்று தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்தால் அந்த அதிகாரியை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதில்லை என்ற கொள்கையும் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
எனவே, தமிழக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் யாரையும் தேர்தல் பணியாற்றுவதற்கு தடை விதிப்பது தொடர்பாக இப்போது கேள்வி எதுவும் எழவில்லை என்று கூறியுள்ளார் குப்தா.