இந்துக்கள் பற்றி பேச்சு-கருணாநிதிக்கு எதிரான மனு தள்ளுபடி
சென்னை: இந்துக்களுக்கு எதிராகப் பேசியதாக எழுந்த விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஆர்.பாலசுப்பிரமணியம் தாக்கல் செய்த மனுவில்,
சென்னை எழும்பூரில் உள்ள ஆன்ட்ரூ தேவாலயத்தில் கிறிஸ்தவர்களின் கூட்டம் 24.10.02 அன்று நடைபெற்றது. அதில் திமுக தலைவர் கருணாநிதி உரையாற்றினார். அப்போது இந்துக்களுக்கு எதிரான சில வார்த்தைகளை அவர் கூறினார். அவை இந்து மக்களின் மனங்களை புண்படுத்தின. கிறிஸ்தவர்கள் ஆமோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வேண்டுமென்றே அவர் அப்படி பேசினார்.
எனவே அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால், வக்கீல் ஆர்.பிரேம்நாத் என்பவர் கருணாநிதி மீது எழும்பூர் 14வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் மீது வழக்கு தொடர்வதற்கான அனுமதியும் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது.
அதைத்தொடர்ந்து சாட்சி விசாரணைக்காக அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டது. விசாரணைக்கு வரும்போதெல்லாம் வழக்கு பலமுறை தள்ளி வைக்கப்பட்டது.
இந் நிலையில் 21.5.07 அன்று அந்த கோர்ட்டுக்குச் சென்று வழக்கின் டைரியை பார்த்தபோது, திமுக தலைவர் கருணாநிதியை வழக்கில் இருந்து விடுதலை செய்து 17.8.06 அன்று தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரியவந்தது.
வழக்கை திரும்பப்பெறுவதாக உதவி அரசு வக்கீல் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஜராகி வாதிடுவதற்கு மனுதாரர் தரப்பினருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு தகுந்த காரணமும் சொல்லப்படவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடரலாம் என்று அப்போதிருந்த அரசு (ஜெயலலிதா அரசு) அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டு இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி முதல்வரான பிறகு, அந்த அரசாணையை திரும்பப் பெறுவதற்காக 27.5.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் பாலசுப்பிரமணியம் கூறியிருந்தார்.
உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரிக்கப்பட்டபோது மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட யாரும் ஆஜராகவில்லை. இதனால் கடந்த 12.10.09 அன்று அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந் நிலையில் பழைய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று 25 நாட்கள் காலதாமதமாக இன்னொரு மனு தாக்கல் செய்யப்பட்டது. காலதாமதமாக மனு தாக்கல் செய்வதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் பழைய மனுவை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் இன்னொரு மனுவும் பாலசுப்பிரமணியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் தர்மாராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். இந்த மனுவுக்கு அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறுகையில் 21.7.09, 23.7.09, 11.9.09 ஆகிய தேதிகளில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போதிய சந்தர்ப்பம் தரப்பட்டும் அதை மனுதாரர் தரப்பு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், பழைய மனுவை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட வேண்டிய மனு, காலதாமதமாக தாக்கல் செய்யப்படுவதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று மனுதாரர் கூறியிருக்கிறார். ஆனால் அப்படி பொறுத்துக் கொள்வதற்கு போதிய காரணங்கள் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications