தனியார்மயமாக்கல்-வருமான வரி ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்
சென்னை: வருமான வரித்துறையி்ல் தனியார்மயமாக்கலை எதிர்த்து நாளை அந்தத் துறையின் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை அதிகாரிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு பொறுப்பாளர்கள் விவேகானந்தன், சேஷாத்திரி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வருமான வரித்துறை சார்ந்த பணிகளை தனியாரிடம் விட மாட்டோம் என்று ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களுடன் மத்திய நேரடிவரி வாரியத்துடன் 2007ம்ஆண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது.
இன்போஸிஸ் வசம் பணி:
ஆனால், அந்த ஒப்பந்தத்தை மீறி வருமான வரிப் படிவங்கள் பரிசீலிப்பது உள்ளிட்ட முக்கிய பணிகள் இன்போசிஸ் நிறுவனத்துடன் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே, பான் கார்டு வழங்கும் வரி பிடித்தம் செய்யும் படிவங்களை சமர்ப்பிக்கும் பணியும் தனியார் மயமாக்கப்பட்டுவிட்டது.
2010-2011ம் நிதியாண்டில் வசூலிக்கப்பட வேண்டிய நேரடி வரி ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடியாகும். வேலைப் பளு அதிகரித்து வரும் நிலையில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் தேவை. ஏற்கனவே 15,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் உள்ளன.
வருமான வரித்துறையில் பல்வேறு கேடர் பதவிகள் 6வது ஊதியக் குழுவில் ஒன்றாக்கப்பட்டுவிட்டன. இந்த துறையில் இருக்க வேண்டிய கேடர்களையும், பதவி எண்ணிக்கைகளையும் அவற்றுக்கான சம்பள விகிதங்கள் தொடர்பான கோரிக்கைகளுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், வருமான வரித்துறையில் தனியார்மயமாக்கலை கண்டித்தும் நாடு தழுவிய அளவில் நாளை (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications