For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வறுமைக்கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களுக்கும் மானிய விலையில் அரிசி-கோதுமை!

By Chakra
Google Oneindia Tamil News

Rice
டெல்லி: வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களுக்கும் மத்திய அரசின் உணவுக்கு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவர் ரங்கராஜன் கூறியுள்ளார்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு ரேசன் கடைகளில் கிலோ ரூ. 3 விலையில் அரிசி அல்லது கோதுமை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு உத்தரவாத சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால், ரேசன் கடைகள் மூலம் பொருளாதார பேதம் பார்க்காமல் அனைவருக்குமே மானிய விலை உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் உணவுத்துறையின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ரங்கராஜன் கூறுகையில்,

உணவுக்கு உத்தரவாதம் தரும் சட்டத்தின் கீழ் வசதி படைத்தவர்கள் என்ற பிரிவில் வரும் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் பெற சட்ட உரிமை கோரலாம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 30 கிலோ, வறுமைக் கோட்டுக்கு மேல் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 15 கிலோ உணவு தானியம் மாதந்தோறும் வழங்கலாம் என்ற மாற்று யோசனையும் தெரிவிக்கப்படுகிறது.

இப்படி செய்யும்போது அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச உணவு தானிய உத்தரவாதம் கிடைத்துவிடும்.

இப்படி அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்களை வழங்கினால் அது அரசுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும். இதனால் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு ஒரு விலையிலும், வசதி படைத்தவர்களுக்கு வேறு விலையிலும் உணவு தானியங்களை ரேசன் மூலம் வழங்கலாம்..

உணவுக்கு உத்தரவாத சட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு மேல் வாழும் குடும்பங்களையும் சேர்த்தால் உணவு தானிய தேவை 5 கோடி டன்னாக அதிகரிக்கும். இருப்பினும் உணவுப்பொருள் உற்பத்தியும் அதிகரித்து வருவதால் உணவுக்கு உத்தரவாத திட்டத்தை வெற்றிகரமாக அமலாக்கிவிட முடியும் என்றார் ரங்கராஜன்.

நாடு முழுவதும் இப்போது 6.5 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்பதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இது 42 கோடி என்கிறது சர்வதேச ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மழையில் நனைந்து உணவு தானியம் நாசம்:

இந் நிலையில் உத்தரப் பிரதேசத்தில் திறந்தவெளியில் உணவு தானியங்களை குவித்து மழையில் நனையவிட்டு நாசம் செய்ததற்காக இந்திய உணவுக்கழக அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் அறிவித்துள்ளார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல், உணவுத தானியங்களை பொறுப்பாக சேமித்து வைப்பது இந்திய உணவுக்கழக அதிகாரிகளின் கடமை. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் மழைக் காலத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்,கோதுமை போன்ற உணவு தானியங்களை திறந்தவெளியில் குவித்து மழையில் நனையவிட்டுள்ளனர். இதில் ஏராளமான உணவு தானியம் நாசமடைந்துள்ளன. குறைந்தது அவற்றின் மீது தார்பாலின் போட்டு மூடியிருந்தாலும் பாதுகாத்திருக்கலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக பலமுறை இந்திய உணவுக்கழக தலைவரிடம் பேசினேன். தவறுக்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். உத்தரப் பிரதேசத்தின் சில இடங்களில் உணவு தானியங்கள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்படவில்லை. மழைக்காலம் என்பதால் குறைந்தபட்சம் தானியக் குவியல் மீது தார்பாலினையாவது போர்த்தி மூடவேண்டும் என்றார் சரத் பவார்.

இந்தியாவில் உணவு தானியங்களை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை. இதனால் உணவு தானியங்கள் கெட்டுப்போவது தொடர் கதையாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X