முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொழிற்சங்கம் தொடங்கினார்-புதுக் கட்சிக்குத் திட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதிதாக தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதையடுத்து அவர் புதுக் கட்சி தொடங்கலாம் என பேசப்படுகிறது.
புதுச்சேரியில் 2 முறை முதல்வர் பதவியில் இருந்தவர் ரங்கசாமி. தனக்கென தனி ஆதரவு வட்டாரத்தை வைத்திருப்பவர். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து, டீக்கடையில் டீ சாப்பிட்டு அடிக்கடி அசத்துவது இவரது வழக்கம். இவர் போட்டிருக்கும் நீளமான சட்டையில் நாலைந்து பேர் உள்ளே போய் வரலாம். அவ்வளவு பெரிய சட்டை போட்டுக் கொண்டு எளிமையாக வலம் வந்தவர்.
ரங்கசாமிக்கு ஏற்பட்ட செல்வாக்கைப் பார்த்து நாராயணசாமி, வைத்திலிங்கம் உள்ளிட்ட அனைத்துக்கோஷ்டியினருக்கும் பெரும் வயிற்றெரிச்சல். இதையடுத்து அத்தனை கோஷ்டிகளும் ஓரணியில் நின்று ரங்கசாமியை மீண்டும் முதல்வர் பதவியில் அமர விடாமல் செய்துவிட்டனர்.வைத்திலிங்கம் முதல்வரானார்.
தற்போது வைத்திலிங்கம் மீது அங்கு கடும் அதிருப்தி நிலவுகிறது. நித்தமும் போராட்டம் என்ற அளவுக்கு புதுச்சேரி பரபரப்பாகவே உள்ளது.
இந்த நிலையில் தற்போது ரங்கசாமி புதிதாக என்.ஆர். தொழிற்சங்கம் என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே என்.ஆர். பேரவை என்ற அமைப்பை அவர் வைத்துள்ளார். இந்த நிலையில் தொழிற்சங்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதன் காரணமாக ரங்கசாமி காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி புதுக் கட்சி ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி அவர் கட்சி ஆரம்பித்தால் புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழும் என்றும் கூறப்படுகிறது. காரணம் தற்போது காங்கிரஸுக்கு உள்ள 13 எம்.எல்.ஏக்களில் 6 பேர் ரங்கசாமி ஆதரவாளர்களாம். மேலும், நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் கூட ரங்கசாமியின் ஆதரவாளர்களாம்.
இதனால் ரங்கசாமி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற பரபரப்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.