தண்டவாளத்தில் விரிசல்-பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் தப்பியது
அரியலூர்: அரியலூர் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கிராமவாசி ஒருவர் உரிய நேரத்தில் கண்டுபிடித்து சிவப்புத் துணியைக் காட்டி பல்லவன் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்சியிலிருந்து சென்னை நோக்கி பல்லவன் எக்ஸ்பிரஸ் இன்று காலை கிளம்பியது. இந்த ரயில் சென்னை வந்து பிறகு வைகை எக்ஸ்பிரஸாக மதுரைக்குக் கிளம்ப வேண்டும்.
ரயில் அரியலூர் அருகே சில்லக்குடி என்ற கிராமத்தில் வந்தபோது தண்டவாளத்தில் வித்தியாசமான சத்தம் வருவதை கேட்ட அப்பகுதியில் இருந்த கிராமவாசி ஒருவர் சிவப்புத் துணியைக் காட்டி பல்லவன் எக்ஸ்பிரஸை நிறுத்தினார்.
வித்தியாசமான சத்தம் வந்த இடத்திற்கு 100 மீட்டருக்கு முன்பே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்தனர்.அவர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தையும், சிமென்ட் சிலாப்பையும் இணைக்கும் பகுதியில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதன் காரணமாகவே வித்தியாசமான சத்தம் கேட்டுள்ளது. இந்த விரிசலைப் பார்க்காமல் பல ரயில்கள் வந்து போனதால் விரிசல் அதிகமாகி சத்தம் அதிகமாகியுள்ளது. ஒருவேளை பல்லவன் எக்ஸ்பிரஸ் இதன் மீது போயிருந்தால் நிச்சயம் விபரீதம் ஏற்பட்டிருக்கும் என ரயில்வே ஊழியர்கள் கூறினர்.
விரிசல் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக பல்லவன் எக்ஸ்பிரஸ் புறப்பட்டுச் சென்றது. இதன் காரணமாக சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிசல் தற்காலிகமாகவே சரிசெய்யப்பட்டிருப்பதால் சில்லக்குடி பகுதியில் ரயில்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.