அமெரிக்காவில் விமான விபத்து-2 பெங்களூர் தமிழ் சகோதரர்கள் பலி
பெங்களூரைச் சேர்ந்த அளஞ்சியம் கலைச்செல்வன் கிங்பிஷர் விமான நிறுவனத்தில் பைலட்டாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கார்த்திக் கலைச்செல்வன் (22) அமெரிக்காவில் விமானப் பைலட் பயிற்சியை முடித்துவிட்டு டெஸ்ஸாஸ் அருகே ஆர்லிங்டனில் உள்ள ஸ்கைமேட்ஸ் பிள்டை ஸ்கூல் விமானப் பயி்ற்சி மையத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
கார்த்திக்கின் தம்பி பிரதிக் கலைச்செல்வன் (19) சென்னையில் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்.
சமீபத்தில் பிரதிக் தனது சகோதரரை காண அமெரிக்கா சென்றிருந்தார். கடந்த 13ம் தேதி இருவரும் ஸ்டீபன்வில்லே என்ற இடத்தில் உள்ள ஹார்ட்-எய்ட் பிபிக்யூ என்ற மிகப் பிரபலமான ஹோட்டலில் டின்னருக்காக சிறிய விமானத்தில் சென்றனர்.
கேசே பிரினேகர் (26) என்பவர் இந்த விமானத்தை ஓட்டிச் சென்றார். இவர் கார்த்திக்குடன் விமான நிறுவனத்தில் விமான பயிற்சியாளராக பணியாற்றி வந்தார்.
ஸ்டீபன்வில்லாவிலிருந்து திரும்பி வந்தபோது, டெக்ஸாஸ் ஹூட் கவுன்டி அருகே இவர்கள் வந்த பீச்கிராப்ட் பொனான்ஸா சி-33 ரக சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது.
இதில் பிரினேகர் மற்றும் கார்த்திக் இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பிரதீக் ஹெலிகாப்டர் மூலம் போர்ட்வோர்த்தில் உள்ள ஜான் பீட்டர் ஸ்மித் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து நடந்தபோது பிரினேகர் தான் விமானத்தை இயக்கினாரா என்பது உறுதியாகவிலலை என டெக்ஸாஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கார்த்திக், பிரதீக்கின் பெற்றோர் டெக்ஸாஸ் விரைந்துள்ளனர். பலியான சகோதரர்களின் உடல்களை பெங்களூருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விமான விபத்துக்குள்ளானது ஏன் என்று தெரியவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது.