செக்ஸ் புகார் கூறப்பட்ட பெண்-கோர்ட்டில் ஆஜராகி புகார்களை மறுத்தார்
தென்காசி: செக்ஸ் தொல்லையால் மாயமானதாக கூறப்பட்ட பெண் நேற்று இரவு தென்காசி கோர்ட்டில் திடீரென்று ஆஜரானார். தனது கணவர் எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காக என்னை கருவியாக பயன்படுத்துகிறார் என்று கூறி அனைத்துப் புகார்களையும் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அட்டைகுளத்தை சேர்ந்தவர் முகமது மைதீன். இவருடைய மனைவி அசன்பாத்திமா. கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் முகமது மைதீன் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் நான் அட்டைகுளத்தை சேர்ந்த மைதீன், அசன் இப்ராகீம், ஆரிபுல்லா ஆகியோரிடம் 1 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். அந்த பணத்திற்கு வட்டியாக மாதம் ரூ.5 ஆயிரம் கொடுத்து வந்தேன். ஆனால் கடன் கொடுத்த 3 பேரும் கடன் பணத்தை திரும்ப கேட்டு வீட்டில் தனியாக என் மனைவியிடம் செக்ஸ் தொல்லை கொடுத்தனர். அதனால் என் மனைவி மாயமாகி விட்டார். எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது மனைவியைக் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்தனர். பின்னர் அந்தப் புகைப்படங்களை எஸ்.எம்.எஸ்.மூலம் பரப்பி விட்டனர் என்றும் அவர் கூறியிருந்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் வெளியாகின. அதில் அசன் பாத்திமாவுக்கு முத்தமிடுவது போல காட்சிகள் இருந்தன.
இந்த புகாரின் பேரில் கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே அவர்கள் 3 பேரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் செக்ஸ் தொல்லையால் மாயமானதாக கூறப்பட்ட அசன்பாத்திமா நேற்று இரவு 7 மணிக்கு தென்காசி கோர்ட்டுக்கு திடீரென வந்தார். தனது வக்கீல்கள் கேபி குமார் பாண்டியன், கண்ணன் ஆகியோருடன் மாஜிஸ்திரேட் சரிதா முன்னிலையி்ல் ஆஜரானார்.
பின்னர் அசன் பாத்திமா வாக்குமூலம் ஓன்றை தாக்கல் செய்தார். அதில் தனது கணவர் மீது பரபரப்பான குற்றச்சாட்டினை கூறி இருந்தார்.
மைதீன், அசன்இப்ராகீம், ஆரிபுல்லா ஆகிய 3 பேரும் பணம் கொடுத்தவர்கள் சார்பில் என் கணவரிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். என் கணவர் செய்த தவறுகளை சுட்டி காட்டியதால் அவர்கள் 3 பேர் மீதும் என் கணவருக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது. எனவே அவர்களை பழி வாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீது போலீசில் என் கணவர் பொய் புகார் கொடுத்துள்ளார். அவரது உள்நோக்கத்துக்கு என்னை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளார். மேலும் அவர்கள் 3 பேரும் என்னை ஆபாச படம் எடுத்ததாக பொய் புகார் கொடுத்துள்ளார்.
அவர்கள் என்னை ஆபாச செல்போனில் படம் எடுக்கவும் இல்லை. என்னை தென்காசிக்கு கடத்தி சென்றதும் இல்லை. உண்மையில் என்னை என் கணவர் பல நேரங்களில் வீட்டில் வைத்து என்னை ஆபாசமாக படம் எடுத்து அதை 3 பேருக்கும் செல்போன் மூலம் பார்வேர்டு செய்து அவர்கள் என்னை ஆபாச படம் எடுத்ததாக வீண் பழி சுமத்தி அதன் மூலம் தனது எதிரிகள் மீதுள்ள பகை உணர்ச்சியை தீர்த்து கொண்டதோடு கடன் சுமையில் இருந்து தன்னையும் காப்பாற்றிக் கொண்டார் என்று கூறியிருந்தார்.
அவரது வாக்குமூலத்தை ஏற்றுப் பதிவு செய்ய மாஜிஸ்திரேட் சரிதா உத்தரவிட்டார்.
அசன் பாத்திமாவின் இந்த திடீர் வாக்குமூலத்தால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.