சிறப்புத் தூதர் என்று பேசி திசை திருப்பப் பார்க்கிறார் கருணாநிதி-வைகோ

நெல்லையில் நடந்த திருமண விழாவில் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா., சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது. அந்தக் குழுவுக்கு இலங்கை பெரும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
இதற்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய பிரதிநிதிகளும் தமிழர்களுக்கு ஆதரவாக முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் இலங்கைக்கு சிறப்பு தூதர் அனுப்ப வேண்டும் என்ற கருணாநிதியின் கோரிக்கை பிரச்னையை திசை திருப்புவதே ஆகும் என்றார்.
தமிழகத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு
முன்னதாக அவர் விடுத்திருந்த ஒரு அறிக்கை:
முல்லைப் பெரியாறு வாழ்வாதாரப் பிரச்சனையில் கேரள அரசு திட்டமிட்ட அநீதியைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு சட்டரீதியான உத்தரவாதம் பெற்று இருக்கின்ற, பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை எத்தகைய வெள்ளம் வந்தாலும் தாங்கும் பலம் கொண்டதாகும். ஆனால், முல்லைப் பெரியாறு அணை உடையும் என்ற பிரச்சாரத்தைத் தொடர்ந்து செய்து வருகின்ற கேரள அரசு அணையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறது.
இந்தப் பிரச்சனை குறித்த வழக்கில், இருதரப்பையும் விசாரித்த உச்சநீதி மன்றம் அணை வலுவாக இருப்பதால் 142 அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம் என்று அளித்த தீர்ப்பை குப்பையில் போட்டுவிட்டு அக்கிரமமான சட்டத்தை கேரள அரசு நிறைவேற்றியது.
மேலும், முல்லைப் பெரியாறு அணையை உடைக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்று இந்திய இறையாண்மையையும், மத்திய அரசையும் கேலிப் பொருளாக்கி சட்டம் போட்டது.
புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதித்தது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் ஆகும். இப்பிரச்சனை குறித்து உச்சநீதிமன்றம் ஐவர் குழுவை அமைத்து இருக்கின்ற நிலையில், மத்திய அரசு அனுமதி அளிக்காத இடங்களிலும் ஆய்வு நடத்தி முடித்து விட்டோம் என்று கேரள நீர்ப்பாசன அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தற்போது, தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் உரிய அனுமதி பெறாமல், ஏன் தகவலே கூட தெரிவிக்காமல் கேரள அரசின் வருவாய்த் துறை அதிகாரிகளும், மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரும் நமது முல்லைப் பெரியாறு அணைக்கு கேமராக்களுடன் வந்து படம் பிடித்து அணையைப்பற்றி ஆய்வு நடத்தி உள்ளனர்.
இதில், மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படையினர் கேரள அரசு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவது தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும். மத்திய அரசு கடந்த 6 ஆண்டு காலமாக தமிழகத்துக்கு எதிராகவும், கேரளத்துக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தமிழகத்துக்கு தீங்கு செய்துவரும் கேரள அரசுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிப்பதோடு தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு செயல்பட முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications