பஸ் மீது கார் மோதி தீப்பிடித்தது-பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி
விக்கிரவாண்டி: சித்தணி அருகே நள்ளிரவில் பஸ் மீது கார் மோதி தீப்பிடித்ததில் 2 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகள் சண்முகப்பிரியா (27). இவர் சென்னை அண்ணாநகரில் சாப்ட்வேர் கம்பெனி ஒன்று நடத்தி வந்தார்.
இவர் நெல்லையில் நடந்த திமுக வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தனது நிறுவனத்தில் பணிபுரியும் விஜய்ஆனந்த் (27), அனிதா (19), சபரிகிரி (19) ஆகியோருடன் ஒரு காரில் நெல்லைக்கு சென்றார். காரை டிரைவர் ஜெயசுதாகர் (33) என்பவர் ஓட்டினார்.
இவர்கள் அனைவரும் அந்த முகாமில் கலந்து கொண்டுவிட்டு சென்னைக்கு புறப்பட்டனர். இவர்களின் கார் விக்கிரவாண்டியில் உள்ள சித்தணி அருகே வந்து கொண்டிருந்தபோது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற அரசு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்து பற்றி அறிந்த போலீசாரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
இதில் விஜய்ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். காயமடைந்த சண்முகப்பிரியா, அனிதா, சபரிகிரி, டிரைவர் ஜெயசுதாகர் ஆகியோர் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சண்முகப்பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அனிதா, சபரிகிரி, ஜெயசுதாகர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.