2 நேபாள பெண்களை கடத்திய இந்தியர்கள்-மீட்க முடியாமல் திணறல்
காத்மாண்டு : இந்திய எல்லையோரம் உள்ள தெற்கு நேபாளில் உள்ளது கன்சன்பூர் மாவட்டம். இந்த மாவட்டத்தை சேர்ந்த மீட்பு படையினர் இந்திய குடியுரிமை உள்ளவர்களால் கடந்த 26 நாட்களாக பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருக்கும் 2 நேபாள பெண்களை மீட்க முடியாமல் வெறுங்கையுடன் திரும்பி உள்ளனர்.
இந்த குழுவில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, உரிமை போராளிகள் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் அடக்கம். இந்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்காததால் அவர்கள் கன்சன்பூருக்கே திரும்பிவிட்டனர்.
மாயா குமாரி பி.கே.(14) மற்றும் கந்தி குமாரி தமாய்(15) ஆகிய அந்தப் பெண்கள் நேபாளத்திலிருந்து கடத்தப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டனர். இந்தியர்களான அஜய் பஞ்சராவும், ரமேஷ் பஞ்சராவும் சேர்ந்து அந்த பெண்களை உத்தர பிரதேசம், பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள அம்ரித்பூருக்கு கொண்டு சென்றதாக அந்த பெண்களின் குடும்பத்தார் தெரிவித்தனர்.
அவர்கள் இங்கு வந்ததில் இருந்து பஹதூர் பாரதி என்ற டாக்டரின் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டுள்ளனர்.
கன்சன்பூர் மாவட்ட தலைமை அதிகாரி அந்த பெண்களை பத்திரமாக மீட்டுத் தருவதாக அவர்களின் குடும்பத்தாருக்கு உறுதி அளித்துள்ளார். மேலும், அவர்களை மீட்பது தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
அந்த பெண்களின் குடும்பத்தார் தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தரும்படி உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்திய-நேபாள எல்லையை ஒட்டிய சுமார் 1,800 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளக்கடத்தல், ஆள் கடத்தல் போன்ற குற்றங்கள் பெருமளவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.