சென்னையில் சிறுவன் கொலை-நாகையில் சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட கொடுமை
சென்னை: சென்னையைச் சேர்ந்த சிறுவன் கொலை செய்யப்பட்டு அவனது உடலை சூட்கேஸில் வைத்து நாகை பஸ் நிலையத்தில் போட்டுச் சென்றுளளது ஒரு கொடூரக் கும்பல்.
நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி முதல் ஒரு சூட்கேஸ் எடுப்பார் இன்றி கிடந்துள்ளது. வெகு நேரத்திற்கு பிறகு அந்த சூட்கேஸில் ஈ மொய்த்ததை பார்த்த கடைக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் கிடைத்து வந்த போலீசார் சூட்கேஸை கிழித்து பார்த்த போது 4 வயது மதிக்க தக்க சிறுவன் ஒருவனின் சடலம் இருந்தது. அந்த சிறுவனை யாரோ கழுத்தை நெறித்து கொன்று, முகத்தை பாலீத்தின் பைகளால் இருக்கக் கட்டியுள்ளனர்.
நேற்று போலீசார், நீல நிற டீ சர்ட்டு போட்டுள்ள 4 வயது மதிக்க தக்க அழகான சிறுவனின் சடலம் கிடைத்துள்ளதாக அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தனர்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜெயக்குமார் என்பவரின் மனைவி ஆனந்தி நாகப்பட்டிணத்திற்கு வந்தார்.
சிறுவனின் சடலத்தை பார்த்த அவர் அது தனது பிள்ளைதான் என்பதை அடையாளம் காட்டினார். பின்னர் அதிர்ச்சியில் மூர்ச்சையானார்.
அவரை மயக்கம் தெளிய வைத்து விசாரித்தபோது,
எனது கணவரின் தோழி பூவரசி. அவர் வேப்பேரியில் இருக்கும் ஒய்.டபுள்யூ.சி.ஏ. விடுதியில் தங்கி பஜாஜ் இன்சூரன்சில் வேலை பார்க்கிறார். தனது விடுதியில் ஏதோ விழா என்று கூறி என் மகன் ஆதித்யாவை அழைத்து சென்றார். மாலை ஆகியும் என் மகனை வீட்டிற்கு கொண்டு வந்து விடவில்லை.
அதனால், பூவரசியின் செல்லுக்கு போன் செய்த போது சுவிட்ச் ஆப் என்று வந்தது. அவர் தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார்கள்.
மருத்துவமனைக்கு சென்றால், பூவரசி சென்னை ஐகோர்ட் அருகில் உள்ள கோவில் வழியாக வருகையில் தான் மயங்கி விட்டதாகவும், ஆதித்யா பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறினார்.
இது குறித்து போலீசில் புகார் கொடுக்க சென்ற போது தான் நாகையில் ஒரு சிறுவனின் சடலம் கிடைத்துள்ளது என்றார்கள். அதை கேட்டு இங்கு ஓடி வந்தால் அது என் மகனின் சடலம் தான் என்பது தெரியவந்தது என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் சென்னையில் இருந்து நாகை வரை பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனந்தியின் புகாரின் பேரில் போலீசார் பூவரசியை கைது செய்து, தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சிறுவனின் தந்தைக்கு இதில் சம்மந்தம் இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.