இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம்: கருணாநிதி
இந்தியாவிற்கு வந்துள்ள இலங்கைத் தமிழ் எம்.பி.க்களான சம்பந்தன், சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேம சந்திரன், சுமந்திரன் ஆகியோர் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் சம்பந்தன் பேசுகையில்,
இலங்கையில் வாழும் தமிழர்களை அவரவர் சொந்த ஊர்களில் குடி வைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதில் உள்ள சிக்கல் குறித்து முதல்வரிடம் கூறினோம்.
இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொருத்து தான் மற்ற நாடுகளும் நடவடிக்கை எடுக்கும். ஆகையால், நாங்கள் இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து இலங்கையில் உள்ள நிலவரத்தை பற்றி எடுத்துரைத்தோம்.
தமிழக முதல்வரை சந்தித்தபோது, இலங்கைத் தமிழர்களுக்கு எந்தச் சூழலிலும் உறுதுணையாக இருப்போம், அவர்களை ஒரு போதும் கைவிட மாட்டோம் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
முதல்வர் கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது. போருக்கு பிறகு இலங்கை தமிழர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறி விட்டது. வன்னிப் பகுதியில் மீண்டும் ராணுவ மயமாக்கல்தான் நடைபெறுகிறது. இலங்கைத் தமிழர்களை சிறுபாண்மையினராக்க ராஜபக்சே அரசு முயற்சி செய்கிறது.
இலங்கைக்கு சிறப்பு பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். இந்த கோரிக்கையை இந்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றார்.