வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை-ஹாக்கி பயிற்சியாளர் கெளசிக் விலகல்
இந்திய ஹாக்கி வீராங்கனைகளிடம் செக்ஸ் தொல்லை கொடுத்து அக்கிரமம் செய்ததாக கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ், பயிற்சிக் குழுவைச் சேர்ந்த அனைத்து ஊழியர்கள் மீதும் ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை புகார் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக 30க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கையெழுத்திட்ட மனு ஹாக்கி இந்தியாவிடம் அளிக்கப்பட்டது.
இதை விசாரிக்க ராஜீவ் மேத்தா தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்குப் பின்னர் வீடியோகிராபர் பசவராஜ் உடனடியாக நீக்கப்பட்டார். அவர் பல்வேறு பெண்களுடன் ஜாலியாக இருப்பது போன்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது கெளசிக் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், என் மீதான புகார்கள் பொய்யானவை. அவை தவறு என்று நிரூபிக்கும் வரை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை. எனக்கு எதிராக நடந்துள்ள மிகப் பெரிய சதி என்பதை மட்டும் தெரிவிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
கெளசிக் விலகல் குறித்து ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் நரேந்தர் பத்ரா கூறுகையில், கெளசிக் தனது ராஜினாமா கடிதத்தை ஹாக்கி இந்தியா தலைவர் வித்யா ஸ்டோக்ஸிடம் கொடுத்துள்ளார். அவரது முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.