பாமக துணையின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி
திருவள்ளூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல் தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், அக் கட்சியின் இளைஞர் அணி தலைவருமான அன்புமணி கூறினார்.
பாமக பொதுக்குழுக் கூட்டம் திருவள்ளூரில் நடந்தது. அதில் பேசிய அன்புமணி,
கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் எந்த சூழ்நிலையிலும் நிர்வாகிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். கடும் உழைப்பே என்றென்றும் வெற்றியைத் தரும். ஆகையால் நிர்வாகிகள் கடுமையாக உழைத்தால் பதவியும், பொறுப்புகளும் அவர்களைத் தேடி வரும்.
கட்சியை வலுப்படுத்தும் வகையில் ஒன்றிய அளவில் பொதுக்குழு அமைக்கப்படும்.
ஒன்றியச் செயலாளர்களாக பொறுப்பு வகிப்பவர்களுக்கு அந்தந்த ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைச் செயலாளர்களின் பெயர்களும் தெரிந்திருக்க வேண்டும். தேர்தல் வரும் முன் அந்தந்த பகுதி நிர்வாகிகள் நேரடியாக மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பதுடன் கட்சியின் கொள்கைகளையும் பரப்ப வேண்டும்.
ஒரு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்றால் கட்சியே அழிந்துவிடும், காணாமல் போய்விடும் என பலர் பேசுகின்றனர். ஆனால் 1991ம் ஆண்டு திமுக ஒரு தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. 1996ம் ஆண்டு அதிமுக 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
அந்தக் கட்சிகள் வளர்ச்சி அடையவில்லையா?. அதுபோல் பாமகவும் மீண்டு வரும், தேர்தலில் முழு எழுச்சி பெறும். பாமகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்பதை நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் உணர்ந்து ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றார்.